தமிழ்நாடு
வாக்காளர் பட்டியலில் ஆணின் பெயர்- வாக்களிக்க முடியாமல் பெண் ஏமாற்றம்
- பூமாரியின் புகைப்படம், கணவர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருந்தது.
- பெயர் மாறி இருப்பதால் பூமாரி வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
தேனி:
தேனி பங்களாபட்டியை சேர்ந்த இளங்கோவன் மனைவி பூமாரி (வயது 53). இவர் தனது குடும்பத்தினருடன் தேனி எடமால் தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேற்று வாக்கு செலுத்த வந்தார். தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்குள் சென்றார்.
அப்போது அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறியதாக தெரிகிறது. பின்னர், அவர் தனது வாக்காளர் அட்டையை காண்பித்து, கடந்த தேர்தலில் வாக்களித்தேன் என்றார். பின்னர் வாக்காளர் பட்டியலில் தேடிப் பார்த்தபோது அவருடைய வாக்காளர் விவரத்தில், அவருடைய பெயருக்கு பதில் சிவக்குமார் என்று ஆணின் பெயர் இருந்தது.
ஆனால், அதில் பூமாரியின் புகைப்படம், கணவர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருந்தது. பெயர் மட்டும் மாறி இருந்ததால் அவர் தனது வாக்கை பதிவு செய்ய அனுமதி கேட்டு முறையிட்டார். பெயர் மாறி இருப்பதால் அவர் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அவர் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.