தமிழ்நாடு
கார்த்தி சிதம்பரம் மனைவி மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு
- சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
- தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகங்கை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் இறுதிநேர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே, இன்று மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்யச் சென்றார். அப்போது தேர்தல் அதிகாரிகள் அவரிடம் பிரசாரம் செய்வதற்கான அனுமதிக் கடிதம் குறித்து கேட்டனர். அப்போது ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தைக் காட்டினார்.
தேர்தல் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்ததால் அவர்களுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் வார்டு வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், தேர்தல் அதிகாரி செந்தில்வேல் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி உள்பட 60 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.