செய்திகள்
சாட்சிகளை விசாரிக்கும் விவகாரம்: சசிகலா மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது ஆணையம்
சசிகலாவுக்கு எதிரான சாட்சிகளை விசாரிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #Jayadeathprobe #Sasikala
சென்னை:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததை அடுத்து இதுபற்றி விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், உறவினர்கள் என பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அவர் சிறையில் இருப்பதால் அவர் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வருகிறார். அப்போது, சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியலை கேட்டு ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை ஆணையம் இன்று விசாரணை நடத்தியது. விசாரணைக்காக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார். பின்னர் வழக்கு விசாரணை 25-ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #Jayadeathprobe #Sasikala #tamilnews
Next Story