சினிமா
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சார்லி சாப்ளின்-2
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
`பார்ட்டி' படத்தை தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வரும் படம் ‘சார்லி சாப்ளின்-2’.
கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் அடுத்த பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தில் வைபவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் கூறும்போது,
முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக சார்லி சாப்ளின் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் பிரபுதேவா - சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சி ஒன்றும் அங்கேயே பிரமாண்டமாக படமாக்கப்பட்டது என்றார்.
அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை செளந்தர்ராஜன் மேற்கொள்கிறார். பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story