சினிமா
சம்பளத்தைவிட கதாபாத்திரம் முக்கியம்: ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுஷ், விக்ரம் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் துல்கர்சல்மான், நிவின் பாலி ஆகியோருடன் நடிக்கிறார். என்றாலும், இவருடைய சம்பளம் உயரவில்லை என்று தகவல் வெளியானது.
இதுகுறித்து கேட்டபோது, ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பதில்...
“நடிப்பவர்களுக்கு சம்பளம் முக்கியம் தான். என்றாலும், கதாபாத்திரம் அதைவிட முக்கியம். சிறந்த கதாபாத்திரங்கள்தான் நடிகர், நடிகைகளை உயரத்துக்கு கொண்டு செல்லும். ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடித்த வேடம்தான் இதுவரை என்னைப்பற்றி பேசவைத்துக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் குறைவான சம்பளத்தில் தான் நடித்தேன். ஆனால் நல்ல பெயர் கிடைத்தது.
இன்று வரை நான் சம்பளத்தை விட கதாபாத்திரங்களுக்குத் தான் முதலிடம் கொடுக்கிறேன். என் உயரம் என்னவென்று எனக்குத் தெரியும். எனவே, அதற்கேற்ற சம்பளத்தை வாங்குகிறேன். நான் தற்போது நடிக்கும் ஒரு படத்தில் எனக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகைக்கு கூடுதல் சம்பளம் பேசப்பட்டது.
ஆனால், எனக்கு குறைந்த சம்பளம் தான் பேசினார்கள். என்றாலும், அது பற்றி யோசிக்காமல் நடித்து வருகிறேன். இந்த படத்துக்குப் பிறகு சம்பளம் உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.