சினிமா
தனது பயணம் ரத்து தொடர்பாக இலங்கை தமிழர்களுக்கு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்
தனது இலங்கை பயணத்தை ரத்து செய்த ரஜினிகாந்த், இலங்கை தமிழ் மக்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்ன கூறியுள்ளார் என்பதை கீழே பார்ப்போம்.
இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைக்க நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதாக இருந்தது. ஆனால் ரஜினி இலங்கை செல்ல தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரஜினி தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
மேலும் நான் ஒரு கலைஞன், எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்றும் ரஜினி கோரியிருந்தார். எதிர்காலத்தில் நான் இலங்கை செல்ல வாய்ப்பு கிடைத்தால் அரசியல் காரணங்களை கூறி அதனை தடுக்க வேண்டாம் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ரஜினியின் வருகை ரத்து ஆனதை தொடர்ந்து, இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள், குறிப்பிட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினி கூறியதாவது,
"நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும் போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
Next Story