சென்னையில் சுதந்திர தினத்தன்று இரண்டு கொள்ளையர்கள் வரிசையாக 50 வீடுகளில் கொள்ளையடிக்கின்றனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தினம் என்பதால் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர்.
கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய 50 வீடுகளில் விஷாலின் வீடும் ஒன்று. கொள்ளையர்கள் தாக்கியதில் விஷாலின் பாட்டி மயக்கமடைந்து விடுகிறார். ராணுவத்தில் பணியாற்றி வரும் விஷால், இச்சம்பவம் குறித்து தெரிந்ததும் ஊருக்கு விரைகிறார். தனது தந்தை வாங்கிய சக்ரா மெடலும் திருடு போனதை அறியும் விஷால் கொள்ளையர்களை பிடிக்க முனைப்பு காட்டுகிறார்.
தனது காதலியும், போலீஸ் உயர் அதிகாரியுமான நாயகி ஷ்ரத்தா தான், இந்த கொள்ளை வழக்கை விசாரிக்கிறார் என்பதை அறியும் விஷால், அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன. இறுதியில் அவர்கள் இந்த கொள்ளைக்கு பின்னால் உள்ள முக்கிய புள்ளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் விஷால், ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். மிடுக்கான உடற்கட்டுடன் திறம்பட நடித்திருக்கிறார். அதிரடி ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் கலக்கி இருக்கிறார். கொள்ளையர்களை களையெடுக்க அவர் கையாளும் யுக்திகள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது.
நாயகி ஷ்ரத்தா, வழக்கமான நாயகி போல் இல்லாமல், போலீஸ் அதிகாரியாக வந்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருக்கிறார். நாயகன் விஷாலுக்கு இணையாக போட்டி போட்டு நடித்துள்ளார்.
படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது ரெஜினா தான், இத்தனை நாளா இந்த நடிப்பு திறமையை எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க என கேட்கும் அளவுக்கு மெர்சல் காட்டி உள்ளார். அவருடைய கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கே.ஆர்.விஜயா, மனோபாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள்.
இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த், அவருக்கு இது அறிமுக படமாக இருந்தாலும், திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக அமைந்தது படத்திற்கு கூடுதல் பலம். எதிர்பார்க்க முடியாத பல்வேறு டுவிஸ்டுகளை கொடுத்து படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார்.
படத்தின் ஹைலைட் என்றால் அது யுவனின் இசை தான். குறிப்பாக பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் வலு சேர்த்திருக்கிறது. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு அட்டகாசம்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.