சென்னையில் ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டிங்கை அகற்றாமல், சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அப்பகுதியில் வசித்து வரும் துணை நடிகையான ஊர்வசியின் மகன்தான் நாயகன் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நடன குழுவை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கலைஞர்களுக்காக கொடுத்த இடத்தை கேட்கிறார் தயாரிப்பாளரின் மகன். தான் பண நெருக்கடியில் இருப்பதாகவும், அந்த இடத்தை கொடுத்தால் பணப்பிரச்சனை தீரும் என்றும் கூறுகிறார். ஆனால் சினிமா கலைஞர்களுக்கோ அந்த இடத்தை விட்டு போக விருப்பம் இல்லை. அதேசமயம், தங்களுக்கு இடம் கொடுத்த தயாரிப்பாளர் மகனையும் அப்படியே அனுப்ப மனம் இல்லை. அதனால், தங்களால் முடிந்த பணத்தை கொடுக்கிறோம் என்று நாயகன் ராஜ்குமார் கூறுகிறார்.
அதன்படி பணத்தை திரட்ட தயாராகும் ராஜ்குமார், உலகளவில் நடக்கும் நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றால் கோடிக் கணக்கில் பணம் கிடைப்பதை அறிந்து அதில் கலந்துக் கொள்ள முயற்சி செய்கிறார்.
மற்றொரு புறத்தில் பரத நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர் நாயகி ஸ்ரிஜிதா. இவரின் ஒரே உரிக்கோள் பெரிய நடன கலைஞராக இருக்கும் நாகேந்திர பிரசாத்தை தோற்கடிப்பது. நாயகன் ராஜ்குமாருக்கும் நாயகி ஸ்ரிஜிதாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஸ்ரிஜிதாவும் பணப்பிரச்சனையில் சிக்குகிறார். இதற்கு ஒரே வழி நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
இறுதியில் நாயகன் ராஜ்குமார் அந்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்று கலைஞர்களுக்கான குடியிருப்பு பகுதியை தக்க வைத்தாரா? நாயகி ஸ்ரிஜிதா, நாகேந்திர பிரசாத் மீது கோபமாக இருக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராஜ்குமார், சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடன திறமையை திறம்பட செய்திருக்கிறார். நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் வலம் வரலாம். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகேந்திர பிரசாத் திரையில் தோன்றி ரசிகர்களை நடனத்தால் கவர்ந்திருக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள்.
நடனத்தை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும், மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி. படத்தில் ஒரு சில காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக டி.ஆர். பாடிய பாடல் தாளம் போட வைக்கிறது. மாடசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.