ஊரிலேயே பிரபலமான மணியக்காரக் குடும்பத்தில் மனைவி மீரா கிருஷ்ணன், மகன் உமாபதி, தனது அம்மா என எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வீக சொத்தை விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார் குடும்பத் தலைவர் தம்பி ராமையா. செலவுக்கு வீட்டில் இருக்கும் பொருட்கள், பண்ட பாத்திரங்களை விற்று சமாளித்து வருகிறார்.
அப்பாவுக்கு மகன் தப்பாமல் பிறந்துவிட்டான் என்பது போல, தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் வேலைக்கு செல்லாமல் ஊர்
சுற்றி வருகிறார். உமாபதி எப்போதும் தனது மாமாவான விவேக் பிரசன்னாவுடனேயே நேரத்தை கழிக்கிறார்.
இந்த நிலையில், தம்பி ராமையாவின் தங்கை மகளான நாயகி மிருதுளா முரளியை, உமாபதிக்கு திருமணம் செய்து வைக்க பேசுவதற்காக குடும்பத்துடன் தனது தங்கை வீட்டிற்குச் செல்கிறார் தம்பி ராமையா. ஆனால் மிருதுளாவின் அப்பா ஜெயப்பிரகாஷ், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் உமாபதிக்கு பெண் தர முடியாது என்று தம்பி ராமையா குடும்பத்தை அவமானப்படுத்தி விடுகிறார்.
இதனால் கோபமடையும் உமாபதி, தொழில் செய்து பெரிய ஆளாக வந்து, மிருதுளாவை திருமணம் செய்வேன் என்று ஜெயப்பிரகாஷிடம் சபதம் செய்கிறார். மிருதுளாவுக்கும் உமாபதி மீது காதல் இருக்கிறது. எனவே உமாபதிக்கு சில யோசனைகளையும் வழங்குகிறார். இதையடுத்து ஊரில் காற்றாலை ஒன்றை வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் உமாபதி. அதற்காக பணத்தை சேர்க்க முயற்சி செய்கிறார்.
பல கோடிகள் செலவாகும் என்பதால், அந்த ஊரில் இருக்கும் மக்களை பங்குதாரர்களாக்கி அவர்களிடம் இருந்து பணம் வாங்கி காற்றாலை வைக்க தயராகி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு இடைஞ்சல் கொடுக்கிறார் பவன். மேலும் உமாபதியிடமிருந்த பணத்தையும் மொட்டை ராஜேந்திரன் எடுத்துச் செல்கிறார்.
இவ்வாறாக பிரச்சனைகள் தன்னை சூழ கடைசியில், தொலைத்த பணத்தை மீட்டாரா? காற்றாலை அமைத்தாரா? தனது சபதத்தை நிறைவேற்றி, மிருதுளாவை மணந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வரும் உமாபதி, கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் சிறப்பகவே நடித்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் தனது நடனத்தால் அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார். விவேக் பிரசன்னா - உமாபதி சேர்ந்து செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. மிருதுளா முரளி அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்ந்திருக்கிறார்.
தனக்கு உரிய தனித்துவமான நடிப்புடன் பார்ப்போரை பரவசப்பட வைத்திருக்கிறார் தம்பி ராமையா. வேலைக்கு செல்லாமல் விற்று திண்ணும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சமுத்திரக்கனி சிறப்பு தோற்றத்தில் பொறுப்புடன் வந்து செல்கிறார். ராதா ரவி, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு வலுசேர்த்திருக்கின்றனர். ஒரு பாடலுக்கு வந்தாலும் யாஷிகா ஆனந்த் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது குடும்ப கதையில், தனது மகனை வைத்தே படத்தை இயக்கியிருக்கிறார் தம்பி ராமையா. படத்தை ரசிக்கும்படியாகவே உருவாக்கியிருக்கிறார். ஒரு அப்பாவாக, மகனை சிறப்பாகவே இயக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் படத்தை முழுமைப்படுத்தவில்லையோ என்ற எண்ணத்தையும் தோன்ற வைத்துவிட்டார். திரைக்கதையில் ஆங்காங்கே பிணைப்பு இல்லாமல் கதை நகர்கிறது.
அதிகாரம் பண்ணி வேலை வாங்கிய குடும்பத்தின் அதிகாரங்கள் பிடுங்கப்படும் போது, அந்த குடும்பம் நிற்கதியாக நிற்கும். அப்படி நிற்கும் குடும்பத்தில் வேலையில்லாமல் சொத்துக்களை விற்று திங்கும் அப்பா, கணவனை உள்ளங்கையில் தாங்கும் மனைவி, மனைவியுடன் இலவசமாக வந்த தம்பி, அவரது மகன் என குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவர் பற்றிய கதை தான் மணியார் குடும்பம்.
தம்பி ராமையாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும்படியாக உள்ளது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `மணியார் குடும்பம்' பலமாகியிருக்கலாம். #ManiyarKudumbamReview #UmapathyRamayya #MridulaMurali
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.