நாயகன் விக்கி, மிப்பு மற்றும் தாத்தா என இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றனர். மிப்பு செல்போன் கடை வைத்திருக்கிறார். விக்கிக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், விக்கியின் நண்பர் ஒருவர் குறும்படம் ஒன்றை எடுப்பதாகவும், அந்த படத்தில் விக்கியை நாயகனாக நடிக்க வைப்பதாகவும் கூறி பணம் கேட்கிறார்.
வேலையில்லாமல் அன்றாட பிழைப்புக்கே அல்லல்படும் விக்கி, பணத்தை புரட்ட கஷ்டப்படுகிறார். இந்த நிலையில், மிப்புவும், விக்கியும் பார்ட்டி ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கு பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் ஒருவரை சந்திக்கின்றனர். அவர் விக்கியை கால் பாயாக அனுப்பி வைப்பதாக கூறி, விக்கிக்கு பணம் தருவதாக கூறுகிறார்.
விக்கியும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், கால் பாயாக செல்ல சம்மதிக்கிறார். கால் பாயாகவும் செல்கிறார். இதுஒருபுறம் இருக்க மிப்பு தனது கடைக்கு சரிபார்க்க வரும் செல்போன்களில் இருக்கும் தகவல்களை திருடி எடுத்து வைத்துக் கொள்கிறார். அவ்வாறு அவர் திருடும் ஒரு செல்போனில் சண்முகசுந்தரம் பேசுவதை கேட்கிறார். அதில் அவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் இருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.
இதையடுத்து சண்முகசுந்தரம் வீட்டில் இருந்து பணத்தை திருட முடிவு செய்யும் மிப்பு, அதற்காக அந்த வீட்டிற்கு செல்ல, கால் பாயான நாயகன் விக்கி அந்த வீட்டில் இருந்து வெளியே வருகிறார்.
இதையடுத்து விக்கியிடம் பணம் குறித்த தகவல்களை மிப்பு கூறுகிறார். அந்த பணத்தை இருவரும் திருட முடிவு செய்து அந்த வீட்டிற்குள் செல்ல, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த வீட்டில் இருந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க இருவரும் செய்வதறியாது முழிக்கின்றனர். மேலும் அந்த பணமும் காணாமல் போகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பிப்பதற்காக அந்த வீட்டில் இருந்து வெளியே ஓடி வரும் இருவரும் போலீசில் சிக்கிக் கொள்கின்றனர்.
கடைசியில் விக்கி - மிப்பு போலீசில் இருந்து தப்பித்தார்களா? அந்த பணத்தை கைப்பற்றினார்களா? அந்த வீட்டில் இருந்த பெண்ணை கொன்றது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
விக்கி நாயகனாக நடிக்கும் முதல் படம் இது. நாயகனாக அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். மிப்பு காமெடியில் கைகொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு துணையாக இருந்துள்ளனர்.
ஒரு சிறிய குழுவை வைத்து, சிறிய பட்ஜெட்டில் படம் பண்ணுவது என்பது எளிதில்லை, அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி. கால் பாய் என்பது நிஜ வாழ்க்கையில் இருந்தாலும், பணத்திற்காக நாயகன் கால் பாயாக மாறுவதாக காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதை மட்டும் தவிர்த்து பார்த்தால் படம் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக வந்திருக்கிறது.
சித்தார்த் விபின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். ரத்தின குமார் ஒளிப்பதிவும் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.