படத்தின் நாயகன் அஜய் ராஜ் பத்திரிகையாளர். ஆபாச வீடியோவை தடை செய்வது பற்றி மக்களின் கருத்துக்களை அறிந்து வரச் சொல்லி அவருக்கு உத்தரவு வருகிறது. அதன்படி மக்களிடம் நேரிடையாக சென்று அவர்களது கருத்துக்களை அறிந்து வரும் அஜய் ராஜிடம், அந்த இணையதளங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என ஒருவர் கேட்க, தான் அதை பார்த்ததில்லை என்று நாயகன் கூறுகிறார். முதலில் அந்த இணையதளங்களை பாருங்கள், அதனால் எத்தனை உயிர்பலி ஏற்படுகிறது என்பது உங்களுக்கு புரிய வரும் என்கிறார்.
இதையடுத்து ஆபாச இணையதளங்களை பார்க்கும் அஜய் ராஜ், அதில் சமீபத்தில் திருமணமான தனது நண்பனுடைய மனைவியின் ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். இதுகுறித்து தனது நண்பனிடம் கேட்கும் போது, தனது மனைவியை ஆபாசமாக நான் தான் வீடியோ எடுத்தேன் என்று அவரது நண்பன் கூறுகிறார். தனது மனைவியின் அனுமதியுடன், தனது ஆசைக்காக அந்த வீடியோவை பதிவு செய்ததாக நண்பர் கூறுகிறார்.
தான் அந்த வீடியோவை பாதுகாப்பாக வைத்திருந்ததாக கூறும் அவரது நண்பர், அந்த வீடியோ எப்படி வெளியானது என்று தெரியவில்லை என்று கூறுகிறார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். தனது நண்பணுக்கு நடந்தது, இன்னும் நிறைய பேருக்கு நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அஜய் ராஜ் அந்த வீடியோ எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்பதை பற்றி ஆராய ஆரம்பிக்கிறார்.
முதலில் அந்த வீடியோவை பதிவிடுவது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, ஐடி ஊழியரான தனது தம்பியே இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறான் என்பது தெரிந்து அவனிடம் இதுபற்றி கேட்கிறார். ஒரே ஒரு மெயில் ஐடி கிடைத்தால் போதும், அதன் மூலம் அவரது கணினியில் இருக்கும் அனைத்து தகவல்களையும் என்னால் எடுக்க முடியும். அப்படி எடுத்தது தான் அந்த வீடியோ. அது யார் வீடியோ என்று எனக்கு தெரியாது. அந்த வீடியோவை ஒரு நல்ல விலைக்கு வேறு ஒருவரிடம் விற்றுவிட்டதாக அஜய் ராஜின் தம்பி கூறுகிறார்.
இதையடுத்து அந்த வீடியோவை வாங்குபவரை பற்றி விசாரிக்கிறார். அவர் மூலம் அந்த இணையதளத்தை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல் கிடைக்கிறது. ஆபாச இணையதளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களது பத்திரிகையில் செய்தி ஒன்றை வெளியிடுகின்றனர். அப்போது பெண் ஒருவர் இதுகுறித்து புகார் அளிக்கிறார்.
போலீசால் கூட முடக்க முடியாத அந்த இணையதளம் கடைசியில் முடக்கப்பட்டதா? சம்பந்தப்பட்ட 5 பேரை அஜய் ராஜ் கண்டுபிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
அஜய் ராஜ், அக்ரிதி சிங், சியா மிகாஅபினவ், அபிஷேக், அஜய் தத்தா, அபர்ணா நிஷாத், அர்ஜுன், நீலம் காந்தாரி, விஷ்வந்த் என படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
பொதுவாக நாம், நமது போன், நமது லேப்டாப் என ரகசியங்களை பதிவு செய்து வைக்கிறோம். அவர்கள் மறைத்து வைத்துள்ளதாக நினைக்கும் தகவல்கள் அவர்கள் அறிமாமலேயே அவர்களிடமிருந்து திருடப்படுவது நமக்கு தெரியவில்லை. இந்த மாதிரியான இணையதளங்கள் சமூகத்திற்கே கேடு. இதன்மூலம் பல உயிர்கள் போகிறது. பெண்கள், தனது அந்தரங்களை வீடியோவாக பதிவு செய்வது ஆபத்தானது. பெண்கள் யாருடன் பழகுகிறோம் என்பதை தெரிந்து பழக வேண்டும்.
காசுக்காக பெண்களுடன் பழகி, அவர்களை தவறாக வீடியோ எடுக்கும் சிலரும் இருக்கின்றனர் என சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சஜோ சுந்தர். ஆரம்பம் முதல் முடிவு வரை படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருந்தாலும், நாயகனின் நண்பனின் மனைவி சம்பந்தபட்ட ஆபாச காட்சி உள்ளிட்ட சில காட்சிகளின் நீளம் அதிகமாக இருக்கிறது.
இதுபோன்ற படங்களால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் படமாக இருந்தாலும், ஒரு சில ஆபாச காட்சிகளை ஒரு படமாக எடுப்பது போல எடுத்திருப்பது நெருடலை கொடுக்கிறது. பாடல், சண்டை என எதுவும் இல்லாமல் விறுவிறுப்புடன் கொடுத்திருக்கும் படக்குழுவுக்கு பாராட்டுக்கள்.
ஜோகானின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. வின்சென்ட் அமல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `எக்ஸ் வீடியோஸ்' பார்க்க வேண்டியது. #XVideos
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.