சென்னையில் அரசியல்வாதி ஒருவர் வீட்டில் ரெய்டு நடக்கிறது. இவர்களின் சொத்து விவரங்கள் அடங்கிய லேப்டாப் வெளியே நின்று கொண்டிருக்கும் ஆடிட்டர் முனிஸ் காந்த்திடம் தூக்கி வீசப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு மதுசூதனனிடம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார் முனிஸ்காந்த். மேலும், அந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டு காசிக்கு சென்று விடுகிறார். இவரை பிடிப்பதற்காக போலீஸ் அதிகாரி ராதாரவி அங்கு செல்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, சென்னையில் வறுமையில் வாடும் நாயகன் ஜெய், காசியில் தனக்கு ஒரு பூர்வீக சொத்து இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார். காசியில் நாயகன் ஜீவா நடத்தி வரும் லாட்ஜில் தங்கி, தன்னுடைய பூர்வீக சொத்து எங்கு இருக்கிறது என்பதை தேடி வருகிறார்.
இதற்காக அந்த ஊரின் தாசில்தாராக இருக்கும் நிக்கி கல்ராணி சந்திக்க செல்கிறார். அங்கு நிக்கியை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். நிக்கியும் உங்கள் பூர்வீக சொத்தை விரைவில் கண்டு பிடித்து தருவதாக கூறுகிறார். கடைசியில் ஜீவா நடத்தி வரும் லாட்ஜ்தான் ஜெய்யின் பூர்வீக சொத்து என்று நிக்கிக்கு தெரிய வருகிறது.
இதற்கு ஜீவா தன்னுடைய தங்கையின் திருமணம் நடைபெற இருப்பதால், ஜெய்யிடம் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். ஜீவாவின் தங்கையை சதீஷ் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. சதீஷினின் தங்கை கேத்ரீன் தெரசாவை ஜீவா காதலிக்கிறார். இந்நிலையில், சதீஷ் ஜீவாவின் தங்கையை திருமணம் செய்ய மறுக்கிறார்.
இதற்கிடையில், ஜெய் மற்றும் ஜீவாவின் பணத்தை ஒரு மர்ம நபர் ஏமாற்றுகிறார். அந்த நபர் சிவா என்று இருவருக்கும் தெரிய வருகிறது.
இறுதியில் ஜெய் தனது பூர்வீக் சொத்தை அடைந்தாரா? நிக்கியுடன் காதலில் ஒன்று சேர்ந்தாரா? ஜீவா தங்கையின் திருமணம் நடந்ததா? ஜீவா - கேத்ரின் ஒன்று சேர்ந்தார்களா? சிவாவிடம் ஏமாந்த பணத்தை திரும்ப பெற்றார்களா? அரசியல்வாதியின் சொத்துக்கள் அடங்கிய லேப்டாப் கிடைத்ததா? என்பதை கலகலப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகன்களான ஜெய் மற்றும் ஜீவா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பூர்வீக சொத்தை தேடுவது, நிக்கி கல்ராணியுடன் காதலிப்பது என தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார் ஜெய். அதுபோல், லாட்ஜை காப்பாற்ற நினைப்பது, தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது, கேத்ரினை காதலிப்பது என ஜீவா ரசிக்க வைத்திருக்கிறார். இடைவேளையில்தான் தலைகாட்டுகிறார் சிவா. அதன்பிறகு தனது டைமிங் காமெடிகளால் வழக்கம்போல் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா இருவரும் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்கள்.
சதீஷ், யோகிபாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்கள். ராதாரவி, முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சுந்தர்.சியின் கலகலப்பு முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது. அதுபோல் கலகலப்பு இரண்டாம் பாகத்தை உருவாக்கி ஹிட்டாக்கி இருக்கிறார் சுந்தர்.சி. முதல் பாகத்தின் தொடர்ச்சி இரண்டாம் பாகம் இல்லை என்றாலும், அதன் தாக்கம் இரண்டாம் பாகம் இருக்கிறது. பெரிய நடிகர் பட்டாளத்தையும் இப்படத்தில் வைத்திருக்கிறார்.
ஆனால், இவர்களை கையாண்ட விதத்திற்கு சுந்தர்.சியை பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் அழகான கதாபாத்திரத்தை தேர்வு செய்து கொடுத்து அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். படம் ஆரம்பம் மெதுவாக தொடங்கினாலும், போக போக கலகலப்புக்கு எல்லை இல்லாமல் கொடுத்திருக்கிறார்.
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.