இயக்குனர் ஆக முயற்சி செய்யும் அப்புக்குட்டி, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனிடம் கதை சொல்ல வருகிறார். அந்த கதையே ‘வாங்க வாங்க’ திரைக்கதையாக வெள்ளித்திரையில் விரிகிறது.
நிவேதிதா, மதுசந்தா ஆகிய இருவரும் பேஸ்புக் மூலம், தொடர்பில் இருக்கும் குறிப்பிட்ட சில ஆண் நண்பர்களை வலையில் வீழ்த்தி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது வாடிக்கை. இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குள் பேய் இருக்கிறது. இந்த பேயானது, இவர்களை பார்க்க இரவு நேரங்களில் தனியாக வரும் ஆண் நண்பர்களை பயமுறுத்துவதும் தொடர்கிறது.
இந்த பேயிடம் முதலில் சிக்குவது கராத்தே ராஜா தான். சட்டவிரோத பணப் பரிமாற்ற தொழில் செய்யும் கராத்தே ராஜா, மிகப்பெரிய தொகையுடன் வரும்போது, தனது பேஸ்புக் தோழி மதுசந்தாவை பார்க்க வருகிறார். ஆனால் வந்த இடத்தில் பேய் தாக்கி காணாமல் போகிறார். பணத்தை கொடுத்து அனுப்பிய நபரோ, கராத்தே ராஜாவை தேடுவதற்கு விக்கி, ஹனிபா ஆகியோரை அனுப்புகிறார்.
இதேபோல் பேஸ்புக் தொடர்பு பழக்கத்தில் நிவேதிதாவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது அவரை பேய் அடித்துக் கொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் பேய் இல்லை என்பதும், பெண்கள் இருவரும் திட்டமிட்டே கொலை செய்ததும் தெரிகிறது.
குறிப்பிட்ட வாலிபர்களை மட்டும் வீட்டிற்கு வரவழைத்து இவர்கள் கொலை செய்வது ஏன்? அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினை என்ன? என்பதே மீதி கதை.
பவர்ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி இருவருக்கும் கதைசொல்லும் கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. மெசேஜ் சொல்லும் படம் என்பதால் கதாநாயகர்கள் என தனியாக யாருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அந்த வேலையை புதுமுகங்களான விக்கி, ஹனிபா, ராஜேஷ் மோகன், கராத்தே ராஜா, பாபு ஆகியோர் பகிர்ந்து செய்துள்ளனர்.

விக்கியும், ஹனிபாவும் சட்டவிரோதமாக பணப் பரிமற்றம் செய்யும் நபர்களாக, கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பெண்களை தந்திரமாக வலையில் வீழ்த்தும் கேரக்டரில் கராத்தே ராஜா தனக்குரிய பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.
இடைவேளைக்கு பிறகு வந்தாலும் ஸ்ரேயாஸ்ரீ, ஒரு மலைவாழ் பெண் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், சென்டிமென்ட் இரண்டிலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.
பேஸ்புக்கில் நண்பர்களை வசியம் செய்யும் கதாபாத்திரங்களான நிவேதிதா, மதுசந்தா இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக இறுதிக்காட்சியில் பணத்தாசை பிடித்த பெண்ணாக தன்னை காட்டிக்கொள்ளும் நிவேதிதா, நடிப்பில் பாராட்டு பெறுகிறார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என ஒட்டுமொத்த வேலையையும் செய்துள்ள என்.பி.இஸ்மாயில், சமூக கருத்தினை, ‘வாங்க வாங்க’ என்று அழைத்து சொன்னதற்கு முதலில் பாராட்டு தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் போலி நட்பினால் ஏற்படும் பின்விளைவுகள், மோசடி பெண்களை நம்பி வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள் என சமூகம் சார்ந்த பிரச்சனைகளை படம்பிடித்து காட்டியிருப்பது சிறப்பு.
மெசேஜ் சொல்லும் படமாக இருந்தாலும், அதில் திரில்லர், சென்டிமென்ட் மற்றும் கதைப்பின்னல்களை வைத்து திரைக் கதையை நகர்த்தியிருக்கிறார். சி.பி.சிவன், பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் ராஜேஷ் மோகனின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வாங்க வாங்க’ - பொறுமையா பாருங்க.
மேலும் விமர்சனம் செய்திகள்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்
- தன் குடும்பத்தை காக்க போராடும் மோகன்லால் - திரிஷ்யம் 2 விமர்சனம்
- பாசத்திற்காக ஏங்கும் நாயகன் - செம திமிரு விமர்சனம்
- விஷாலின் ஆக்ஷன் விருந்து - சக்ரா விமர்சனம்