இந்நிலையில், அதே ஏரியாவில் சிறிய தாதாவான ராமச்சந்திரன் துரைராஜ், பள்ளியில் படிக்கும் மாணவனுடைய காதலுக்கு உதவப்போய், போலீசில் மாட்டிக் கொள்கிறார். மாணவன் காதலித்த பெண், போலீஸ் அதிகாரியின் மகள் என்பதால் அந்த பிரச்சினை பெரிய அளவுக்கு போகிறது. அந்த பிரச்சினையில் இருந்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் ராமச்சந்திரனை வெளியே கொண்டு வருகிறார் நேசம் முரளி.
இதனால், போலீஸ் அதிகாரிக்கு நேசம் முரளி மீது கோபம் வருகிறது. அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். ஆனால், அரசியல் பின்புலமும், ஆள் பலமும் நேசம் முரளி பின்னால் இருப்பதால் சமயம் பார்த்து அவனை தீர்த்துக்கட்ட காத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், நேசம் முரளி குறவர் இனத்தை சேர்ந்த நாயகி லூதியாவை பார்த்ததும் காதல்வயப்பட்டுகிறார். தனது காதலை அவளிடம் சொல்லும்போது, அவள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இருப்பினும், அவளை ஒருதலையாகவே காதலித்து வருகிறார் நேசம் முரளி.
இந்நிலையில், நேசம் முரளியின் தங்கைக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்தின்போது அனைவருக்கும் சாராயம் கொடுக்கப்படுகிறது. அதைக் குடிக்கும் பலர் அங்கேயே இறந்துபோகின்றனர். இதற்கு காரணம் நேசம் முரளிதான் என்று போலீஸ் அவரை கைது செய்ய முடிவு செய்கிறது.
இதனால், தலைமறைவாகும் அவர் குறவர் இனத்தோடு போய் தஞ்சம் அடைகிறார். இறுதியில், அவரை போலீசார் கைது செய்தார்களா? சாராயம் குடித்தவர்கள் இறந்துபோக காரணம் என்ன? இதற்கெல்லாம் பின்புலமாக செயல்பட்டவர்கள் யார்? என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் நேசம் முரளி நாயகனுக்குண்டான தோற்றம் இல்லாவிட்டாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அட்டாக் முருகன் என்ற பிரபல தாதாவாக வரும் இவருடைய நடவடிக்கைகள் எல்லாம் தாதாவை கண்முன் கொண்டுவருகிறது. ஆனால், நாயகியிடம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில்தான் ரசிக்க முடியவில்லை.
லூதியா குறத்தி வேடத்தில் கச்சிதமாக இருக்கிறார். வசன உச்சரிப்பில்தான் கொஞ்சம் திணறியிருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடமிருந்து பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. வடிவுக்கரசி தனக்கே உரித்தான கம்பீரத்துடன் இப்படத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். வீர வசனம் பேசும் இடங்களில் வடிவுக்கரசி பளிச்சிடுகிறார்.
சிறிய தாதாவாக வரும் ராமச்சந்திரன் துரைராஜ் பல படங்களில் பார்த்த முகம்தான். பார்வையாலேயே மிரட்டும் இவர், இந்த படத்திலும் மிரட்டலாக வருகிறார். ஒருசில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக கதாபாத்திரங்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நாயகன் நேசம் முரளியே இந்த படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு குறவர் இனத்தை பற்றிய படம் வெளிவந்திருக்கிறது. நிறைய படங்களில் அவர்களை பற்றிய உயர்வான எண்ணங்களை நாம் பார்த்திருப்போம். அதேயே இந்த படத்திலும் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு அதரப்பழசான கதைதான் என்றாலும், காட்சியமைப்பிலும், திரைக்கதையிலும் ஏதாவது வித்தியாசம் காட்டியிருக்கலாம்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக, காதலைப் பற்றி தேவா பாடல் பாடும் பாட்டு ரசிக்க வைத்திருக்கிறது. ராஜகோபாலின் ஒளிப்பதிவில் கொள்ளிடம் பகுதியை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘கொள்ளிடம்’ அழகில்லை.