நாயகியின் அம்மா ஒருநாள் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்படுகிறார். இவருடைய சாவுக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று போலீசும், பொதுமக்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தன்னுடைய தாயின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க போலீசிடம் சென்று நாயகி புகார் கொடுக்கிறாள்.
புகாரின்மீது போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கிறது. தனிமையில் விடப்பட்ட நாயகி, கொலை செய்தவரை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு கைகொடுக்குமாறு சேது மற்றும் நாயகன் சக்தியின் உதவியை நாடுகிறாள். அவர்களும் இவளுக்கு உதவி செய்வதாக கூறுகின்றனர். அதனால், அவர்களுடனே தங்கி விடுகிறாள்.
இதற்கிடையில் கலெக்டர் மரணத்தை மீண்டும் தோண்டி எடுக்க காரணமாக இருந்த நாயகியை தீர்த்துக்கட்ட நாகா முடிவெடுக்கிறார். கொலையாளிகளால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணும் நாயகி, நாயகனுடன் கேரளாவுக்கு பயணப்படுகிறாள். போகும் வழியிலேயே நாயகனுக்கு, நாயகி மீது காதல் வந்துவிடுகிறது. ஆனால், நாயகியோ வேறு ஒருவரை கனவில் நினைத்துக் கொண்டு இருக்கிறார்.
இறுதியில் நாயகி தனது தாயின் மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? நாயகனும், நாயகியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சிவஜித் வளர்ந்த தாடி, முரட்டுத்தனமான தோற்றத்துடன் மிரட்டுகிறார். ரவுடி கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தோற்றம் கொண்டவரை நாயகனாக நடிக்க வைத்து வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.இவருடைய நடிப்பு சரியில்லை. நாயகி ஷில்பா அழகாக இருக்கிறார். அழுகை, கோபம் எல்லாம் நன்றாக வருகிறது. காதல் காட்சிகளில்தான் நடிப்பு வரவில்லை. நாயகனின் நண்பனாக வருபவருடைய நடிப்பும் பேசும்படியாக இல்லை.
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு, இயக்கம் என ஒட்டுமொத்தத்தையும் கையில் எடுத்திருக்கும் ராஜேஷ் க்ரவுன், கதாபாத்திரங்கள் தேர்விலேயே கோட்டை விட்டு விட்டார். அதன்பிறகு கதையை எங்கே தேடுவது? ஒட்டுமொத்தமாக படத்தை சொதப்பியிருக்கிறார். அஸ்வின் ஜான்சன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை சொதப்பல்.
மொத்தத்தில் ‘காதலன் யாரடி?’ தேடத்தான் வேண்டும்.