ஆகாஷ் கல்லூரியில் படித்துக்கொண்டே தன்னுடைய நண்பன் நிர்வகிக்கும் பெட்ரோல் பங்கையும் கவனித்து வருகிறார். ஒருநாள் நண்பனுடன் அவனுடைய வீட்டிற்கு செல்லும் ஆகாஷ் அங்குள்ள அனைவரிடமும் நன்றாக பழகுகிறான். இவன் முஸ்லீமாக இருந்தாலும் இந்து வேதங்களை பற்றி நன்றி தெரிந்து வைத்திருக்கிறான். இது இந்து சமுதாயத்தை சேர்ந்த நண்பனின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடித்துப் போய்விடுகிறது. நண்பனின் தாத்தா ஆகாஷை கூட்டிக் கொண்டு கோயில், குளம் என சுற்றுகிறார்.
நண்பனுடைய தங்கச்சியான நாயகி ப்ரீத்திக்கு ஒற்றைத் தலைவலி இருக்கிறது. ஒருநாள் யாரும் இல்லாத நேரத்தில் நண்பனின் வீட்டுக்கு செல்லும் ஆகாஷ், ப்ரீத்தி ஒற்றைத் தலைவலியால் துடித்துக் கொண்டிருப்பதை அறிந்து, அவளை அழைத்துக் கொண்டு மசூதிக்கு செல்கிறான். அங்கு அவளுக்கு ஓதிவிட்டு, ஒற்றை தலைவலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுகிறார்.
ஆகாஷ் தன்மீது காட்டும் பரிவு ப்ரீத்திக்கு அவன்மீது காதல் கொள்ள வைக்கிறது. இதை ஆகாஷிடம் தெரிவிக்கும்போது அவனோ மறுத்துவிடுகிறான். ஆனால், ப்ரீத்தியோ உன்னை காதலிக்க வைக்காமல் விடமாட்டேன் என அவனை மிரட்டுகிறாள். அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும்படி அவனை தொல்லை செய்கிறாள். இதனால் விரக்தியடைந்த ஆகாஷ் தன் நண்பனிடம் இதுகுறித்து சொல்கிறான்.
அவன் தனது தங்கையிடம், ஆகாஷ் அவனுடைய மாமா மகளைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறான். ஆகையால் அவனை மறந்துவிடு என கூறுகிறான். ஆனால், அதையும் அவள் ஏற்காததால், ஆகாஷின் மாமா மகளிடம் நேரிடையாக கூட்டிச் சென்று அவள் மூலமாகவே இதை சொல்ல வைக்கிறான். இதனால் மனமுடைந்து போகிறாள் ப்ரீத்தி.
இறுதியில் ஆகாஷூம், அவருடைய மாமா மகளும் திருமணம் செய்தார்களா? ப்ரீத்தியின் காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஆகாஷ் பிரபு அழகாக இருக்கிறார். டிவி தொடரில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியிருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. நாயகி ப்ரீத்தி சங்கர் இளமை ததும்பலோடு இருக்கிறார். புதுமுகம் என்றாலும் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. நாயகனின் மாமா பெண்ணாக வரும் லாவண்யா-வும் தனது நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்.
முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து, மதங்களை கடந்த காதலை மையப்படுத்தி ஒரு காதல் கதையை உருவாக்கியதில் இயக்குனர் சிவராமன் வெற்றியடைந்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் ஒரு இளைஞனின் காதல் வெற்றிபெற அவனுடைய நண்பர்கள் அவனுக்கு உதவி புரிவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணின் காதல் வெற்றியடைய இன்னொரு பெண் உதவி புரிவதை இப்படத்தில் பார்க்கமுடிகிறது. அதை லாவகமாக கையாண்ட இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
அருள் முருகன் இசையில் சிம்பு பாடிய ‘வேணான்னு சொன்னாடா’ என்ற குத்துப்பாடல் ஆடவைக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. கவின் சுரேஷ் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் காதலை ‘அன்பா... அழகா...’ சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்
- தன் குடும்பத்தை காக்க போராடும் மோகன்லால் - திரிஷ்யம் 2 விமர்சனம்