சின்னத்தம்பி படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் தான் சிக்சர். நாயகன் வைபவ் சிவில் இஞ்ஜினியர். இவருக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் எங்கு இருந்தாலும் 6 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார். இவரது அப்பா இளவரசும், அம்மா ஸ்ரீரஞ்சனியும் வைபவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்கள். வைபவ் ஒரு நாள் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, அவரது வண்டி பழுதாகி நின்றுவிடுகிறது.
இதனால் இவர் நண்பர் சதீசுக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறிவிட்டு பெசன்ட் நகர் பீச்சில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறு அமர்ந்திருக்கிறார். அப்பொழுது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபேராசிரியையை கைது செய்யக்கூறி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நடுவில் அமர்ந்திருக்கும் நாயகன் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பாட்டு கேட்டவாறு அமர்ந்திருக்கிறார்.
அரசியல்வாதியான என்.ஆர்.மனோகரின் ஆட்கள் போலீஸ் உதவியுடன் ஆர்பாட்டகாரர்களை விரட்ட முயற்சிக்கிறார்கள். இதற்கு பயந்து பிறர் கலைந்து சென்றாலும், வைபவ் மட்டும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார். வைபவின் துணிச்சலை பார்த்த ஆர்பாட்டகாரர்கள் மீண்டும் ஒன்று திரள்கின்றனர். இதனால் ஆர்பாட்டம் வெற்றி பெறுகிறது. இதையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அனைவரும் வைபவை பாராட்டுகின்றனர்.
இந்த சூழலில் அங்கு செய்தி சேகரிக்க வரும் நாயகி பல்லக் லல்வானி, வைபவ் மீது காதல் வயப்படுகிறார். தனக்குள்ள குறையை மறைத்து வைபவும் அவரை காதலித்து வருகிறார். இன்னொரு புறம் அந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி என்.ஆர்.மனோகர் வைபவை கொல்லத் துடிக்கிறார். மாலைக்கண் நோயால் ஏற்படும் பிரச்சனைகளை தாண்டி அவர் காதலில் ஜெயித்தாரா? அரசியல்வாதியிடம் இருந்து உயிர் தப்பினாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் வைபவ் மாலைக்கண் நோய் உள்ள இளைஞர் கதாபாத்திரத்தை எளிதாக கையாண்டு இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான வெகுளித்தனமான முகம் இவருக்கு அழகாக பொருந்தி இருக்கிறது. குறிப்பாக தனக்கு பார்வை தெரியாததை அறிந்த ராதாரவியிடம் மாட்டிக்கொள்ளும்போது நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார்.
தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் நாயகி பல்லக் லல்வானி, அழகு பதுமையாக வலம் வருகிறார். ராமர், சதீஷ் ஆகியோர் அவ்வப்போது வந்தாலும் சிரிக்க வைக்க தவறவில்லை. மேலும் இளவரசு, ராதாரவி அனுபவ நடிப்பால நம்மை ரசிக்க வைக்கிறார்கள். என்.ஆர்.மனோகர் மற்றும் ஏ.ஜே. வில்லத்தனத்தால் மிரட்டுகின்றனர்.
அறிமுக இயக்குனர் சாச்சி, மாலைக்கண் நோய் என்பதை கதையின் கருவாக கொண்டு படத்தை நகைச்சுவையாக நகர்த்திய விதம் சிறப்பு. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், பாடல்கள் ஓகே ரகம் தான். பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மொத்தத்தில் ’சிக்சர்’ நகைச்சுவை விருந்து.