சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் அஞ்சன், தனது மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க செல்லும் அவருக்கு அமுதவாணன் பாலாஜி ராதாகிருஷ்ணன் மூன்றுபேரும் நண்பர்களாகிறார்கள்.
அந்த பகுதியில் வசிக்கக்கூடிய நாயகி அஸ்மிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் அஞ்சன். அஸ்மிதாவின் பார்வையிலும் காதல் தெரிவதால் அஞ்சன் தனது காதலை துணிவோடு சொல்கிறார். முதலில் மறுக்கும் அஸ்மிதா, பின்னர் வீட்டின் சம்மதத்துடன் அஞ்சனின் மாமாவுடன் பேசி திருமண நாளையும் முடிவு செய்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், அந்த பகுதியில் மிகவும் செல்வாக்கும், ஆள் பலமும் கொண்ட வேல ராமமூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வருகிறார். அவருக்கு வலதுகரமாக ஆனந்தசாமி செயல்பட்டு வருகிறார். அஞ்சன் தங்கி இருக்கும் கல்லூரியில் வெளிமாநில இளைஞன் ஒருவனை வைத்துக்கொண்டு போதைமருந்து தொழில் செய்து வருகிறார் ஆனந்தசாமி. ஒரு நாள் கல்லூரி விடுதியில் இருக்கும் அஞ்சனின் நண்பனை கொன்றுவிடுகிறார் ஆனந்த சாமி.
இதற்குப் பழிவாங்க ஆனந்த சாமியை அஞ்சன் கொன்றுவிடுகிறார். இதனால் சினம் கொண்ட வேலராமமூர்த்தி அஞ்சனை கொலை செய்ய தேடி அலைகிறார். இதிலிருந்து அஞ்சன் தப்பித்தாரா? அஸ்மிதாவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அஞ்சன் புதிய முகம் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், பாடல்களிலும் பரவாயில்லை என்று சொல்லலாம். நாயகி அஸ்மிதாவிற்கு படத்தில் மிகப்பெரிய வேலை இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் மனதில் நிற்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலம் வேலராமமூர்த்தி. தன்னுடைய அனுபவ நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை எல்லோர் மனதிலும் நிற்க வைக்கிறார். அவருடைய வலது கரமாக இருக்கும் ஆனந்த சாமி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக அமுதவணன், பாலாஜி, ராதாகிருஷ்ணன் கதைக்கு பொருத்தமாக பொருந்தி உள்ளனர்.
பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நந்தன் சுப்புராயன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நடந்தாலும் இரண்டாவது பாதியில் கதையின் விறுவிறுப்பை கூட்டி ரசிக்க வைத்திருக்கிறார். பெரும்பாலும் புதிய முகங்கள் என்றாலும் அவர்களை திறம்பட வேலை வாங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். படத்திற்கு பரமேஷ்வரின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஜுபின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மயூரன்’ அஞ்சான்.