மலேசியாவில் முழு படமும் எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அடுக்கு மாடியில் இருந்து காயத்தோடு தப்பித்து வருகிறார் விக்ரம். இவரை இருவர் துரத்துகிறார்கள் தப்பித்து செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மயக்கத்தில் இருக்கும் விக்ரமை போலீசார் விசாரணைக்காக மருத்துவமனையில் பாதுகாத்து வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் நாசரின் மகன் அபி ஹசன், அவரது மனைவி அக்ஷரா ஹாசனுடன் மலேசியாவில் தனியாக வசித்து வருகிறார்.
நிறைமாத கர்ப்பிணியான அக்ஷரா ஹாசனை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் அபி ஹசனே இரவு வேலைக்கு போய் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் அபி ஹசனுக்கு டியூட்டி போடப்படுகிறது. இவருடய கண்காணிப்பில் தான் விக்ரம் உள்ளார். யாரோ சிலர் விக்ரமை கொல்லப் பார்க்கிறார்கள். உயிருக்குப் போராடும் விக்ரமை அபி ஹசன் காப்பாற்றுகிறார். போலீஸ் விசாரணையில் விக்ரம் ஒரு திருடன் என்பது தெரிய வருகிறது.
அப்பொழுது வீட்டில் தனியாக இருக்கும் நாயகி அக்ஷரா ஹாசனை கடத்தி வைத்திருப்பதாகவும், உடனடியாக விக்ரமை மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வந்து தன்னிடம் சேர்த்தால் தான் அக்ஷரா ஹாசனை விடுவிக்க முடியும் என்று அபி ஹசனுக்கு போனில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி விக்ரமை மருத்துவமனையிலிருந்து அழைத்துக்கொண்டு நாயகியை மீட்பதற்காக செல்கிறார் அபி ஹசன். இதனால் அபி ஹசனும் குற்றவாளி லிஸ்டில் சேர்க்கப்படுகிறார். விக்ரம் யார்? அவரை கொல்ல முயற்சிப்பது யார்? அபி ஹசனும், அக்ஷராவும் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை
படம் முழுக்க விக்ரம் வசனங்கள் ஏதும் பேசாமல் சைலண்டாக பேசி, பார்வையிலேயே வைலண்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விக்ரம். வித்தியாசமான கெட்டப், லுக் என படம் முழுக்க ஸ்டைலிஷாக இருக்கிறார் விக்ரம். விக்ரம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும்.
கர்ப்பிணியாக நடித்திருக்கும் அக்ஷராவுக்கு கொஞ்சம் நேரம் மட்டும் தான் படத்தில் வேலை. இளம் வயதில் இத்தகைய அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அவர், ஒவ்வொரு பிரேமிலும் தடம் பதிக்கிறார். நாசரின் மகன் அபி ஹசனுக்கு இதுதான் முதல்படம். படம் முழுக்க வரும் இவர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ஈர்க்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் லேனா, வின்சென்ட் ராஜதுரை உள்பட அனைவரும் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்கள்.
தூங்காவனம் படத்தை போன்று கடாரம் கொண்டான் படத்தையும் ஆக்ஷன் ஜானரில் எடுத்துள்ளார் ராஜேஷ் எம். செல்வா. சண்டை காட்சிகள், விஷுவல் என அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது. படம் முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதை சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். 2-ம் பாதி ஆக்ஷன் படங்களுக்கான விறுவிறுப்பில்லாமல் செல்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஸ்ரீனிவாஸ் குதாவின் கேமரா படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது.
மொத்தத்தில் ’கடாரம் கொண்டான்’ விறுவிறுப்பு குறைவு.