சென்னை மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்யும் சிறுவர்களின் சோகமான வாழ்வை சித்தரிக்கும் கதை...
கிராமத்தில் பெற்றோரை இழந்து பிழைப்பு தேடி சென்னை வரும் சிறுவன் அம்பிகாபதி வேலை கிடைக்காமல் மெரினாவில் சுண்டல் விற்கிறான். கொத்தடிமையாக விற்கப்பட்ட இடத்தில் இருந்து தப்பி ஓடிவரும் கைலாசமும் அங்கு வியாபாரம் செய்கிறான். இருவரும் நண்பர் களாகிறார்கள்.
அதே பீச்சில் சிறுமியை ஆடவிட்டு பாட்டு பாடி பிழைப்பு நடத்தும் ஆக்காட்டி ஆறுமுகம், மருமகள் சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறி பிச்சை எடுக்கும் பெரியவர் சுந்தர்ராஜன், அநியாயங்களை தட்டிக்கேட்கும் பைத்தியக்கார இளைஞன் ஆகியோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உணர்வால் பிணைந்து வாழ்கின்றனர். இவர்கள் மத்தியில் காதல் ஜோடிகளான சிவகார்த்திகேயன், ஓவியாவின் ஊடல்... கூடல்... மெரினாவின் இன்னொரு புற வலிநிறந்த வாழ்வியலை உணர்வோட்டமாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.
அம்பிகாபதியாக வரும் பக்கோடா பாண்டி கதையின் ஹீரோ. சித்தப்பா கொடுமையில் இருந்து தப்பி பிணஊர்தியில் சென்னை வருவது, வேலையின்றி பட்டினியில் தவிப்பது... பிச்சை எடுக்கும் தாத்தாவிடம் உன்னை நான் காப்பாற்றுறேன், பிச்சை எடுக்காதே என வேண்டுவதுமாக மனதில் அழுத்தமாக பதிகிறார்.
சிறுமியை காப்பாற்ற பணம் வசூலிப்பதில் நெகிழ்ச்சி. பாண்டி நண்பன் கைலாசமாக வரும் கவுதம் புருஷோத் யதார்த்தமாய் பளிச்சிடுகிறார். போலீஸ் அதிகாரி மகன் மண்டையை உடைப்பதும், அதற்காக போலீசார் புருசோத்தை தேடி அலைவதுமான அவரது பின்னணி கதை சுவாரஸ்யம். என் மகள் குத்தவச்சா, உட்கார வைக்க ஒரு குடிசை இல்லியே என தவிக்கும் ஆக்காட்டி ஆறுமுகம் கலங்க வைக்கிறார்.
பழைய பாடல்களை அவர் அடிக்கடி பாடுவது தேன்மழை... தாத்தா சுந்தர்ராஜன் உயிர்ப்பான கேரக்டர். கிளைமாக்சில் சிறுவனுக்கு உதவுவதோடு உயிரையும் விட்டு நெஞ்சில் நிறை கிறார். சிறுவர்களிடம் பரிவுகாட்டும் போஸ்ட்மேன் ஜித்தன்மோகன், குழந்தைகள் நல அதிகாரி ஜெயப்பிரகாஷ் அழுத்தம் பதிக்கின்றனர்.
சிவகார்த்திகேயன், ஓவியா இக்கால காதலை யதார்த்தமாய் பிரதிபலிக்கின்றனர். ஓவியாவுக்கு பிடிக்கும் என சிவகார்த்திகேயன் பைக்வீலிங் விடுவதும், பைக்வீலிங் விடுறவன் சிக்கிரம் சாகப்போறவன் என ஓவியா முறைப்பதும் காதலை முறித்த அவருக்கு சிவகார்த்திகேயன் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவதும் கலகலப்பு. ஓவியா கேரக்டரில் கச்சிதமாய் ஈர்க்கிறார்.
மெரினா சிறுவர்களை சுற்றியே கதை வட்ட மடிப்பது தொய்வாக இருந்தாலும் அழுத்தமான கதையோட்டமும், சுவாரஸ்யங்களும் அவற்றை மறக்கடிக்க செய்து கிளைமாக்சில் பாடமாக பதிகிறது. கிரிஷ் இசையும், விஜய் ஒளிப்பதிவும் உயிர் கொடுக்கின்றன.