ஒரு ஆணும் பெண்ணும் நட்பு கொண்டால் இந்த உலகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது? அவர்களது நட்பு, அவர்களின் வாழ்வில் இறுதிவரை வெறும் நட்பாக செல்கிறதா? அல்லது காதலாக மாறுகிறதா? என்பதே ஸ்ரீதர் படத்தின் கதைக் கருவாகும்.
மருத்துவமனையில் ஒருவரை சந்திக்க வரும் ஸ்ரீதரின் நினைவோட்டத்திலேயே கதை செல்கிறது. ஸ்ரீதர், ஸ்ரீதேவி இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீதர் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்று நினைக்கும் அவனது தந்தை, ஸ்ரீதரை மும்பைக்கு அனுப்புகிறார்.
அங்கு சென்று படிப்பில் கவனம் செலுத்தாமல் இசையில் கவனம் செலுத்தும் ஸ்ரீதர் கிடார் இசைக் கலைஞனாக திரும்புகிறான். இதனால் தந்தைக்கும் மகனுக்குமான உறவில் விரிசல் ஏற்படுகிறது. இருவரையும் சமதானப்படுத்தும் முயற்சியில் ஸ்ரீதரின் தோழி ஸ்ரீதேவி களமிறங்குகிறாள்.
இந்நிலையில் சாலையில் திடீரென சந்திக்கும் ரித்துவின் மேல் காதல் வயப்படுகிறான் ஸ்ரீதர். அவளிடம் தன் காதலைச் சொல்லி அதில் வெற்றியும் பெறுகிறான். அவனது தோழியான ஸ்ரீதேவியும் அமெரிக்காவில் இருக்கும் உதயை காதலிக்கிறாள்.
இந்நிலையில் ஸ்ரீதேவியை பார்க்க உதய் இந்தியா வருகிறான். ஸ்ரீதேவிக்கும், ஸ்ரீதருக்கும் இடையே உள்ள நட்பை உதயும், ஸ்ரீதரின் காதலி ரித்துவும் ரொம்பவே மதிக்கிறார்கள்.
இந்த இரண்டு ஜோடிகளும் இணைந்து கொச்சின் செல்கிறார்கள். அங்கு நடக்கும் இசைப் போட்டியில் கலந்து கொள்ளும் ஸ்ரீதர் வெற்றி பெறுகிறார். ஒருகட்டத்தில் உதய்க்கும் ரித்துவுக்கும் இவர்களின் நட்பு எல்லை மீறுவதாகவும், இந்த நட்பினால் இவர்களது காதல் தடை பெறுவதாகவும் தோன்றுகிறது. இதுவே கருத்து வேறுபாடாகி, இரண்டு காதலர்களும பிரிகிறார்கள். முடிவில் இவர்கள் இணைந்தார்களா? இருவரின் நட்பு ஜெயித்ததா? என்பதே க்ளைமாக்ஸ்.
ஸ்ரீதராக நடித்திருக்கும் சித்தார்த் இளமை துள்ளலோடு நடித்திருக்கிறார். துறுதுறுவென அவர் காதலியுடன் சுற்றுவது, தோழியுடன் பழகுவது என யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
ஸ்ரீதேவியாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் மிளிர்கிறார். சித்தார்த் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி. இவர் வரும் காட்சிகளில் பொலிவு தெரிகிறது. ஸ்ருதிஹாசனின் காதலனாக வரும் நவ்தீப் யதார்த்தமான நடிப்பில் அழுத்தமாகப் பதிகிறார். குறிப்பாக தன் காதலி தன்னைவிட, அவரது நண்பரை அதிகம் நேசிப்பதை அறிந்து வேதனைப்படும் காட்சிகள் அழகு.
காதலையும், நட்பையும் மிகவும் லாவகமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தின் முதல் பாதியில் ஸ்ருதி – சித்தார்த் நட்பைப் பற்றி சொல்ல வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமான காட்சிகளை இருவருக்கும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
கொச்சியில் வைத்து நடக்கும் போட்டியில் சித்தார்த் பாடுவதாக வரும் பாடல் கலக்கல் ரகம்.
படத்தில் வரும் வளவள காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டு திரைக்கதையில் வேகம் காட்டியிருந்தால், ஸ்ரீதர் நட்பின் இலக்கணமாக காட்சியளித்திருக்கும்.