என் மலர்

    சினி வரலாறு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

    "தெரியுமே! திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்?'' என்று கேட்டார், கண்ணதாசன்.

    அவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.

    "நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று வாலி கூற, "நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்'' என்றார், கண்ணதாசன்.

    வாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.

    "காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!'' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.

    "நாம் அடிக்கடி சந்திக்கலாம்...'' என்று கண்ணதாசன் கூறினார்.

    ஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.

    இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான "தீதார்'' படத்தின் கதையை "நீங்காத நினைவு'' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.

    இந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.'' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.

    அதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.

    வாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா "மா.ரா.''வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், "நீங்காத நினைவு'' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.

    (ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)

    இந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.

    முக்தா பிலிம்சார் அப்போது "இதயத்தில் நீ'' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் "நீங்காத நினைவு'' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா "மா.ரா.''வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

    அதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:

    "என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்!

    1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

    நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    "நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்'' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.

    "ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்'' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.

    உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.

    "பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா?

    பொன்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா?''

    - என்பதுதான் அந்தப் பல்லவி.

    "பூவைக்கு என்பதெல்லாம், டிïனுக்கு சரியாக வராதே...'' என்றார் எம்.எஸ்.வி.

    உடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.

    ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.

    நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.

    "சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்'' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.

    விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.

    சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.

    பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:

    "இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?'' என்பதுதான் அந்த கேள்வி.

    நான் கண்கலங்கி மவுனி ஆனேன்.

    சரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.

    "சீனு அண்ணா! அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...'' என்றார் விசு.

    சொன்னார் சீனிவாசன்.

    உடனே நான் எழுதினேன்:

    `ஒடிவது போல் இடையிருக்கும்

    இருக்கட்டுமே! - அது

    ஒய்யார நடை நடக்கும்

    நடக்கட்டுமே!

    சுடுவது போல் கண் சிவக்கும்

    சிவக்கட்டுமே! - அது

    சுட்டுவிட்டால் கவி பிறக்கும்

    பிறக்கட்டுமே!

    விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.

    பிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.

    விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.

    `என்ன சொன்னாரோ?' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்!

    "உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா! இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது'' என்றார் முக்தா.

    எனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.

    முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை''

    இவ்வாறு வாலி கூறினார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.
    டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

    பாலசந்தரிடம் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கோவி.மணிசேகரன் கூறுகிறார்:

    "விஜயதசமி அன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். `அரங்கேற்றம்' படம்தான் எனக்கும் ஆரம்ப அரங்கேற்றம்.

    அவரது சிந்தனை நான்கு திசைகளிலும் சிறகடிக்கும். சிந்தனை அளவுக்கு அவரிடம் சினமும் குடிபுகுந்திருந்தது. ஆயினும் முரட்டுக்கோபம் அல்ல; முன்கோபம்.

    எவருக்கும் `அது இது' என்று எடுத்துச் சொல்லமாட்டார். புத்தி உள்ளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் அந்த குருகுலத்து ஏணிப்படிகளை எண்ணலானேன். நானே யோசிப்பேன்; நானே ஆய்வேன்; நானே புரிந்து கொள்வேன்.

    அரங்கேற்றம் டைட்டிலில் ஒரு குடுகுடுப்பைக்காரன் `நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது' என்று குடுகுடுப்பையைக் குலுக்குவான். அவன் உருவத்தின் மீது என் பெயர் வரும். துணை டைரக்ஷன் - கோவி.மணிசேகரன் என்று! ஆம்; தனி டைட்டில் கார்டுதான்!

    இப்படி தனி டைட்டில் போட்டது குறித்து எங்கள் குழுவில் பிரச்சினை எழுந்தது. குரு கே.பாலசந்தர் சொன்னார்: "அவர் இலக்கிய சாம்ராட் விருது பெற்றவர். நான் அவரை இறக்கி மதித்தால், அவருடைய வாசகர்கள் என்னை இறக்கி மதிப்பிடுவார்கள். எனவே இதுதான் அறம்.''

    அவரது பதில், பலருக்கு இரும்பைக் காய்ச்சி இறக்கியது போலிருந்தது. அன்று முதலே, என் மீது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

    இந்திப்படம் செய்கிற போதுகூட, பாலசந்தர் என்னை இறக்கிப் பார்த்ததில்லை. அவருக்கு எழும் இலக்கிய ஐயங்களை நான் அண்ணாந்து வழங்கியதில்லை; அடிபணிந்து வழங்கியிருக்கிறேன்.

    இருமுறை அவர் என்னை கோபித்துக் கொண்டிருக்கிறார்.

    ஒன்று: வசனத்தாளில் திருத்தப்பட்ட வசனங்களை வரிசையாக எழுதத் தவறியது.

    மற்றொன்று: மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, கன்னடத்தில் அதிகமாகப் பேசப்பட்ட கலை நுணுக்கங்கள் நிறைந்த படம் அருகேயுள்ள ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். துணைக்கு வர யாரும் இல்லை. ஒரு துணை நடிகையும் அந்தப் படத்தைப் பார்க்கத் துடித்தாள்.

    இயக்குனருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைத்து படத்துக்குப்போனோமë. திரும்பி வரும்போதுதான் தெரிந்தது, கருகருவென ஆசான் காத்திருந்தது!

    நடிகையோ ஓடி ஒளிந்து கொண்டாள். நான் அகப்பட்டுக்கொண்டேன். கே.பி.யின் கண்களில் கோபம். என்னை ஏசிவிட்டு, பிறகு ஒரு குழந்தைக்குக் கூறுவது போல் சொன்னார்:

    "கோவி! நீங்கள் பிரபல எழுத்தாளர். அவளோ நடிகை. நாளை இது பத்திரிகைகளில் வந்தால் எவருடைய பெயர் எப்படிக் கெடும் யோசித்தீர்களா?''

    இவ்வாறு பாலசந்தர் கூறியதும், நான் தலை குனிந்தேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டேன்.

    பாலசந்தரிடம் 2ஷி ஆண்டுகள் பணியாற்றினேன். அவரிடம் இருந்து விடைபெறும் நேரம் வந்தது. கண்ணீருடன் விடைபெற்றேன். அவர் கண்களும் கலங்கின.''

    இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

    "பாலசந்தரிடம் இருந்து ஏன் விலகினீர்கள்?'' என்று கேட்டதற்கு மணிசேகரன் சொன்னார்:

    "சினிமா துணை டைரக்டராக பணியாற்றியபோது, எனக்கு கிடைத்த வருமானம் குறைவு. அதற்குமுன் புத்தகம் எழுதுவதன் மூலம்தான் வாழ்க்கை நடந்தது. சினிமாவில் பணியாற்றியபோது, மனைவியின் நகைகளை விற்று குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    "திரைத்தொழில் கற்று என்ன சாதித்து விடப்போகிறீர்கள்?'' என்று என் அன்பு மனையாள் கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

    தவிரவும், பாலசந்தரின் முக்கிய உதவியாளராக விளங்கிய அனந்துடன் எனக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது.

    இத்தகைய காரணங்களால், நான் பிரிய நேர்ந்தது'' என்று கூறிய மணிசேகரன், தொடர்ந்து சொன்னார்:

    இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

    நான் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், புத்தகமாக வெளிவந்தது. அதைப் பாராட்டி, "இந்து'' நாளிதழில் விமர்சனம் வெளியாகியிருந்தது.

    பெங்களூரைச் சேர்ந்த பாபாதேசாய் என்ற படத்தயாரிப்பாளர், அந்த விமர்சனத்தைப்  படித்துவிட்டு, அதைப் படமாக்க விரும்பி, என்னைத் தேடி வந்தார்.

    "இந்து பத்திரிகையில் விமர்சனம் படித்தேன். கதை முழுவதையும் சொல்லுங்கள்'' என்று கூறினார். எனக்கே புரியாத எதிர்பாராத அதிர்ச்சி.

    நான் கதையை ஆங்கிலத்தில் சொன்னேன். பாலசந்தர் பட்டறையில் இருந்ததால், சினிமாவுக்கு ஏற்றபடி கதை சொல்லப் பழகியிருந்தேன். பட அதிபரை கவரும் விதத்தில் கதையைச் சொல்லி கலக்கினேன்.

    கதையைக் கேட்டதும் அவர் கண்களில் நீர் மல்கியது. "இக்கதையை கன்னடத்தில் படமாக எடுக்கிறேன். கதைக்கு என்ன விலை?'' என்று கேட்டார்.

    வெறும் கதையை விற்பதற்கா 2ஷி ஆண்டுகள் திரைத்தவம் செய்தேன்!

    "தமிழில் எடுப்பதானால், கதையைத் தருகிறேன். அதுவும் வசனத்தை நானே எழுதி, டைரக்ட் செய்ய வேண்டும்'' என்று கூறி, பாலசந்தரிடம் பணியாற்றியது பற்றி விவரித்தேன்.

    பாலசந்தர் பெயரைச் சொன்னதும், பாபாதேசாய் மகிழ்ந்து போனார். "தமிழிலும், கன்னடத்திலும் எடுப்போம். ஒரே நேரத்தில் இரு மொழிகளில் எடுக்க உங்களால் முடியுமா?'' என்று கேட்டார்.

    "ஏன் முடியாது?'' என்று திருப்பிக் கேட்டேன்.

    "அப்படியென்றால் ஆகட்டும். திரைக்கதை எழுதத் தொடங்கலாம்'' என்று கூறிவிட்டு, முறைப்படி ஒப்பந்தம் போட்டு, அட்வான்சும் வழங்கினார்.''
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.
    "குறத்திமகன்'' படத்தில் நடித்ததற்கு பிறகு தொடர்ச்சியாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "வாழையடி வாழை'', "தசாவதாரம்'' ஆகிய படங்களில் ஜெயசித்ரா நடித்தார். டைரக்டர் பி.மாதவன் மூலம் 1973-ம் ஆண்டு "பொண்ணுக்கு தங்கமனசு'' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

    நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயசித்ராவுக்கு, அந்த படத்தில் நடித்த பிறகுதான் நடிப்புத்துறை மீது ஆர்வம் வந்தது.

    1974-ம் ஆண்டு சிவாஜியின் மகளாக "பாரதவிலாஸ்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது இந்த படத்தில் நடித்தார். அவர் படத்தில் நடிக்கும்போது தேர்வு நடந்து கொண்டு இருந்தது. எனவே சூட்டிங் சென்றுவிட்டு மேக்கப் சரிவர கலைக்காமல் அப்படியே சென்று தேர்வு எழுதினார். 7-ம் வகுப்பு படிக்கும் போதே நடிக்கத்தொடங்கிய ஜெயசித்ரா, 10-ம் வகுப்பு படிக்கும் வரை திரைப்படங்களில் நடித்ததை மறைத்து வந்தார். சில ஆசிரியைகளுக்கு இது தெரிந்தாலும், தெரிந்ததுபோல் யாரும் காட்டிக்கொள்ளவில்லை.

    தொடர்ந்து சிவாஜியுடன் "சத்யம்'', "லட்சுமி வந்தாச்சு'', "பைலட் பிரேம்நாத்'', "ரத்தபாசம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    சிவாஜி பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "பாரதவிலாஸ் படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்க கற்றுக்கொடுத்தார். அப்போது நான் பாக்கு போட்டுக்கொண்டு டயலாக் பேசுவேன். அதற்கு சிவாஜி, "இப்படி பாக்கு போடக்கூடாது'' என்று கூறினார். அன்று முதல், நடிக்கும்போது நான் பாக்கு போடுவது இல்லை. சத்தியம் படத்தில் அதிகமாக டயலாக் பேச எனக்கு வாய்ப்பு கொடுத்தார்" என்றார்.

    "பொன்வண்டு'' என்ற படத்தில் நடிக்கும்போது, 11-ம் வகுப்பு தேர்வு எழுதமுடியாமல் போயிற்று.

    பின்னர் டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் "நவரத்னம்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.

    இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, "நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்" என்றார்.

    டைரக்டர் கே.பாலசந்தரின் "அரங்கேற்றம்'' என்ற படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    தொடர்ந்து "சொல்லத்தான் நினைக்கிறேன்'' படத்தில் 3-வது தங்கையாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்தபிறகுதான், ஜெயசித்ராவுக்கு "குணச்சித்திர நடிகை'' என்ற பெயர்கிடைத்தது. "டொட்டடொய்ங்'' என்ற மேனரிசம் அந்தப் படத்தில்தான் வந்தது.

    அந்த படத்தில் நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "நான் கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்தேன் என்று பல நடிகைகளிடம் பாலசந்தர் சார் கூறியதாகக் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் சந்தேசமாக இருந்தது. அவரது டைரக்ஷனில் நடித்தை பெருமையாக கருதுகிறேன்" என்றார்.

    தேவர் பிலிம்சாரின் "வெள்ளிக்கிழமை விரதம்'' படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்றாலே மிருகங்கள் இருக்கும். இந்த படத்தில் பாம்பை நடிக்க வைத்தார்கள்.

    படத்தில் பாம்பை கண்டாலே சிவகுமாருக்கு பிடிக்காது. திருமணத்தின் போது, பாம்பை ஒரு கட்டிடத்திற்குள் போட்டு தீ வைத்து விடுவார். பாசமான பாம்பு இறந்து விட்டதே என்று ஜெயசித்ரா மயக்கமாகி விடுவார்.

    முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்ட அறையில் ஜெயசித்ராவின் மீது பாம்பு ஊர்ந்து சென்று, அவர் முகம் அருகே வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பாம்பு ஜெயசித்ராவின் முகத்திற்கு நேராக நின்று அவரது உதட்டை தனது நாவால் வருடிவிடும். உடனே கண் விழிக்கும் ஜெயசித்ரா, "தெய்வமே நீ உயிரோடுதான் இருக்கிறாயா?'' என்று வசனம் பேசுவார்.

    இந்த காட்சியை படத்தில் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும்.

    பாம்புடன் தைரியமாக நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    நான் மயங்கிக் கிடப்பதுபோல் நடித்தபோது, பாம்பு என் உடல் மீது ஏறி பாம்பு என்முகத்திற்கு நேராய் வந்தது. எனக்கு பயம். அருகே தேவர், "முருகா முருகா'' என்று வணங்கிக்கொண்டு இருந்தார்.

    பாம்பு என் உதட்டை தடவிவிட்டு, படம் எடுத்து நிற்கும். உடனே நான் கண்விழித்து, "தெய்வமே நீ உயிருடன் தான் இருக்கிறாயா'' என்று சந்தோஷத்துடன் வசனம் பேசவேண்டும். அப்படி விழித்து வசனம் பேசும்போது பாம்பு திடீர் என்று எனது நெற்றியில் வேகமாக மோதியது. பாம்பு என்னைக் கடித்து விட்டது என்று நினைத்து பயந்து, வசனம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஆனால், பாம்பு கடிக்கவில்லை, என்னை ஆசிர்வாதம் செய்தது. அதை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது.

    இந்த காட்சியில் பயப்படாமல் நடித்ததற்காக தேவர் பாராட்டினார். தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தேன். அந்தக்காட்சியில் பெண்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை கண்கூடாகக் கண்டேன்.

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    1975-ம் ஆண்டு "சினிமாப்பைத்தியம்'' என்ற படத்தில் நடித்தார். "கல்யாணமாம் கல்யாணம்'' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்.

    அதேபோல "அக்கரைப்பச்சை'', "கலியுககண்ணன்'', "வண்டிக்காரன்மகன்'', "பணக்காரப்பெண்'', "தேன்சிந்துதே வானம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    டைரக்டர் ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தில் கமல் ஜோடியாக ஜெயசித்ரா நடித்தார். இந்த சமயத்தில், தெலுங்கு படதயாரிப்பாளர் ராமாநாயுடு மூலம் "சோகாடு'' என்ற படம் மூலம் சோபன்பாபுக்கு ஜோடியாக தெலுங்கில் நடிக்கத்தொடங்கினார்.

    ஜெயசித்ராவின் திருமணம் 1983-ல் நடந்தது. கணவர் பெயர் கணேஷ். இவர் தொழில் அதிபர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

    மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

    கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

    "வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

    1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

    அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

    தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

    அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

    வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

    இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

    அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

    எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

    "கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

    உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

    பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

    "கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

    (1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

    "மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

    ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

    அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

    "ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

    அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

    அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

    பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

    "வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

    ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

    "கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

    அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

    அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

    நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

    ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.

    வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

    பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

    உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

    அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

    முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

    "நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

    மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    "திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.
    "திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.

    பாலசந்தர் இயக்கிய 15 படங்களில் நடித்தவர் சரிதா. மாபெரும் வெற்றி பெற்ற "மரோசரித்ரா'' படத்தின் கதாநாயகி.

    அவர் பாலசந்தர் பற்றி கூறியிருப்பதாவது:-

    "நான் ஒரு "அ.கெ.மு'' என்ன, புரியவில்லையா? அதுதான் "அறிவு கெட்ட முண்டம்.'' பாலசந்தர் சார் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்! அப்படி அவர் கூப்பிடுவதற்கு நான் ரொம்பவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    திரை உலகிற்கு வருவதற்கு முன் நான் வெறும் களிமண். இதை சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் கூட தயக்கமோ, வெட்கமோ கிடையாது.

    என்னை பக்குவமாக "மோல்ட்'' செய்து, நல்ல நடிகை என்று பெயர் வாங்கித் தந்தவர் பாலசந்தர். நடிப்பு என்றால் என்ன, அதன் எல்லைகள் என்ன, கனபரிமாணங்கள் என்ன, இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு பாலசந்தர் பல்கலைக்கழகத்தை விட உயர்ந்த இடம் வேறு என்ன இருக்கிறது?

    பாலசந்தர் படத்தில் நடிக்கிற எந்த ஆர்டிஸ்டுமே அவர் செய்து காட்டுகிற நடிப்பிலே, பத்து சதவீதம் வெளிப்படுத்தினால் போதும், சிறந்த நடிகராக வரமுடியும்.

    தமிழில் என்னுடைய முதல் படமான தப்புத்தாளங்களில் நடிக்கும்போது, எனக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறீர்கள்? வெறும் ஜீரோதான் நான்!

    நான் ஓரளவு நடிக்கக் கற்றுக்கொண்ட பிறகு பாலசந்தர் சார் என்னிடம் "உன் திறமைக்கு சவாலாக இருக்கக்கூடிய வித்தியாசமான ரோல்களாகப் பார்த்து ஒத்துக்கொள். ஒரு சீனில் அழுகிற மாதிரி, இன்னொரு சீனில் இருக்கக் கூடாது. வித்தியாசம் இருக்க வேண்டும். எந்த ஒரு நடிகையின் நடிப்பின் சாயலும் உனக்கு வந்து விடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என்றார்.

    இப்போது கூட எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. "நூல்வேலி'' தெலுங்குப் படத்திலே ஸ்ரீதேவி நடிச்சி இருந்தாங்க. அதை நான் ஒருதரம் பார்த்தேன். தமிழில் நான் நடிக்கிறபோது, தெலுங்கில் ஸ்ரீதேவி உதட்டைக் கடித்த மாதிரி செய்தேன்.

    பாலசந்தர் அதை சட்டென்று கண்டுபிடித்துவிட்டார். "உன்னோட பாணியில் புதுவிதமா அதைச்செய். ஸ்ரீதேவி மாதிரி செய்ய வேண்டுமென்றால், தமிழிலும் ஸ்ரீதேவியையே இந்த வேடத்திற்கு போட்டிருப்பேனே!'' என்றார்.

    சாதாரணமாக செட்டுக்கு போய்விட்டால் அந்த கேரக்டர் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பேன். மனதை வேறு எங்கேயும் அலைபாய விடமாட்டேன். அதுவும் பாலசந்தர் சார் படம் என்றால், இன்னும் இறுக்கமாக இருப்பேன்.

    டைரக்டர் என்னிடம் ஒரு காட்சியை சொல்லி விட்டு, "எப்படி செய்யலாம் என்று யோசித்து வை'' என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் டயம் கொடுப்பார்.

    `இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா' என்று மனதுக்குள் நூறு முறை ஒத்திகை பார்த்துக் கொள்வேன்.

    "என்ன, இந்த சீனை எப்படி செய்யப்போறே?'' என்று அவர் என்னைக் கேட்கும்போது, நாலைந்து விதமாய் செய்து காட்டுவேன். பளிச்சென்று அவருக்கு ஒருவிதம் பிடித்து விடும். "அப்படியே செய்'' என்று சொல்லி, சில மாற்றங்களை மட்டும் செய்து காட்டுவார். அதை அப்படியே நடித்துக்காட்டினால் போதும். காட்சி பிரமாதமாக அமைந்துவிடும்.''

    இவ்வாறு சரிதா கூறியுள்ளார்.

    பாலசந்தர் டைரக்ஷனில், சிவகுமார், சரிதாவும் இணைந்து நடித்த படம் "அக்னிசாட்சி.'' பாலசந்தரின் லட்சிய படங்களில் ஒன்று.

    அந்தப்படம் தயாராகும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றி சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

    "புதுக்கவிதையில் நாட்டம் உள்ள, சிறு வயதில் மனதில் காயம் ஏற்பட்ட கண்ணம்மா என்பவள்தான் "அக்னி சாட்சி''யின் கதாநாயகி. அவளை நேசிக்கும் அற்புத மனிதன் அரவிந்தன் (நான்).

    `என் தலைவா! உன் பெயரை, ஒரு பேப்பரில் எழுதித் தடவிப்பார்! அதில் ஈரப்பசை இருக்கும்...! ஏனெனில், உன் திருநாமம், என் உதட்டு எச்சில்களால், ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகளுக்கு மேல் குளிப்பாட்டப்பட்டதல்லவோ...!' என்று அரவிந்தன் மீது, தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவாள்.

    கண்ணம்மா கருத்தரிப்பாள். வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஒரு கவிதை எழுதுவாள்!

    "அன்புக்குழந்தையே! அம்மா எழுதுகிறேன்... தாய்ப்பால் வருவதற்கு முன்பு, தபால் வருகிறதே என்று பார்க்கிறாயா...!'' என்று துவங்கும் பாடலைப் படமாக்கும்போது, சரிதா, அளவு கடந்த களைப்பு காரணமாக கே.பி. எதிர்பார்த்தபடி செய்யவில்லை.

    "இந்த சீன் படத்தில் வரவே வராதுன்னு நெனைச்சு இப்படி நடிக்கிறியா?'' என்று சீறினார். அந்தக் கோபத்தின் உக்கிரமë தாங்காமல் சரிதா மயக்கமாகி விட்டார். அப்படியும் அவர் விடவில்லை. தண்ணீர் தெளித்து எழுப்பி, நடிக்க வைத்தார்.

    படத்தின் கிளைமாக்ஸ்... சரிதா பிரசவத்தில் இறந்து போவது கதை. "ஒரு `பிரேம்' கூட சரிதா பிரசவ வேதனைப்படுவதைக் காட்டமாட்டேன்...! உன் மூலம் ஆஸ்பத்திரியில் அவள் முடிவைச் சொல்லப்போகிறேன்'' என்று என்னிடம் சொல்லி, பிரமாதமாக அந்தக் காட்சியைப் படமாக்கினார்.

    பின்னணி இசை (ரீ-ரிக்கார்டிங்) சேர்க்காமல் படத்தை மேனா தியேட்டரில் கே.பி. அவர்களும் நானும் சரிதாவும் பார்த்தோம்.

    படத்தின் உச்சகட்டக் காட்சியைப் பார்த்து நான் கேவிக்கேவி அழுதேன். சரிதா கிட்டத்தட்ட மூர்ச்சையடைந்து விட்டார். அவ்வளவு அழுத்தம். கே.பி.தான் எங்களைத் தேற்றினார்.

    அப்படி இழைத்து இழைத்து அவர் உருவாக்கிய படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பல மாதங்கள் டைரக்டர் படுத்து விட்டார்.

    மல்யுத்த மேடைதானே திரையுலகம்...! மீண்டும் சிலிர்த்து எழுந்தார்! `சிந்து பைரவி' படம் உருவாக்கினார்.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
    அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.

    ஜெயசித்ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் காக்கிநாடா. ஆனால் ஜெயசித்ரா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தந்தை மகேந்திரா. இவர் கால்நடை டாக்டராகவும், வக்கீலாகவும் இருந்தார். தாயார் ஜெயஸ்ரீ. ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்பதாகும்!

    ஜெயசித்ராவின் தாயாரும் நடிகைதான். அந்த காலக்கட்டத்தில் ஜெயஸ்ரீ பிரபல நடிகையாக விளங்கினார். அவர் 1954-ம் ஆண்டு "ரோஜலு மாராயி'' (தெலுங்கு "காலம் மாறிப்போச்சு'') படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அன்னதாத்தா, டைகர்ராமுலு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.

    1955-ம் ஆண்டு "மகாவீரபீமன்'' என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் திரவுபதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின்னர் "தெய்வபலம்'', "சிவகாமி'' உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மொத்தம் 40 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.

    திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு ஜெயஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். பின்னர் தனது குழந்தையான ஜெயசித்ராவை நன்றாக வளர்க்கவேண்டும், நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.

    இந்த நிலையில் 5 வயது குழந்தையாக இருந்தபோது "பக்தபோதனா'' என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி தேவிக்கு மகளாக ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா படிக்கும் போதே நாட்டியமும் கற்று வந்தார். பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுக்கொண்டபின், ஜெயசித்ராவின் 11-வது வயதில் நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிமகாலில் நடந்தது. நடன அரங்கேற்றத்துக்கு சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.

    முழுக்க முழுக்க படிப்பிலேயே ஆர்வம் காட்டிவந்த ஜெயசித்ராவிற்கு நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவரோ சினிமாவில் நடிக்க சிறிதும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

    இந்த நிலையில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த ஜெயசித்ராவை விட்டலாச்சாரியா தனது படத்தில் நடிக்கவைக்க நினைத்தார். ஒரு தெலுங்கு படத்திற்கு நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க வைக்க "கேமரா டெஸ்ட்'' எடுத்தனர். ஆனால், உருவத்தில் குமரிப்பெண்ணாக இருந்தாலும், குரல் இன்னும் குழந்தைக் குரலாக இருக்கிறது என்று கூறி, "நீ இப்போது நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க முடியாது. பிறகு வாய்ப்புத் தருகிறேன்'' என்று கூறிவிட்டார், விட்டலாச்சாரியார்.

    திரைத்துறைக்கு வந்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் சென்னை வித்யோதயா பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனது தாயார் என்னை படிக்கவைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நான் வழுவூர்ராமையா பிள்ளைமகன் சாம்ராஜிடம் பரதநாட்டியமும், சின்னசத்தியம் மாஸ்டர், எம்.எஸ்.சைவா ஆகியோரிடம் குச்சுப்புடி நடனமும் கற்றேன்.

    இந்தநிலையில்தான் விட்டலாச்சாரியாவின் பீதலபாட்லு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அப்போது நடிக்க ஆர்வம் இல்லை. அந்த சமயத்தில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். படத்தில் நடிப்பதற்காக கேமரா டெஸ்ட் எடுத்தனர். நான் பேசும்போது தொண்டை கீச், கீச் என்றதால், "இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை, பிறகு வாய்ப்பு தருகிறேன்'' என்றார், விட்டலாச்சாரியார்.

    அதன்பின்னர் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது அழைத்துச்சென்று, இரண்டு வசனங்களை பேசச்சொன்னார். நானும் பேசினேன். நான் பேசியதை கேட்டு சந்தோஷப்பட்ட டைரக்டர், "தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த கதாநாயகி கிடைத்துவிட்டார்'' என்று படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அழைத்து மகிழ்ச்சி பொங்க கூறினார்.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    குறத்தி மகனில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதுதான், "ஜெயசித்ரா'' என்ற பெயரை கோபாலகிருஷ்ணன் சூட்டினார்.

    இந்தப்படத்தில், குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞனை பணக்காரரின் மகளான ஜெயசித்ரா விரும்புவார். இந்தக் காதலை தந்தை ஏற்காததால், ஜெயசித்ரா குறத்தி வேடம் போட்டுக்கொண்டு காதலனுடன் சென்றுவிடுவார்.

    இப்படத்தில் ஜெயசித்ரா துருதுருவென்று நடித்து, ரசிகர்களிடம் `சபாஷ்' பெற்றார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
    1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த "பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.

    ஜெயசித்ராவின் 100-வது படம் "நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.

    பிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.

    1988-ல், கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.

    1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, "புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.

    ஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.

    ஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.

    படங்களில் நடித்து வந்தபோது, "சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பின்னர் "சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.

    இந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.

    ஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது "பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.

    "சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.

    கால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

    ரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் "தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.

    முதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த "பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.

    நான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.

    தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.

    படத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.

    நல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.

    என் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.

    எல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி.
    டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.

    தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்' என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.

    முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. "நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு'' என்று கூறிவிட்டார்.

    ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.

    முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.

    அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், "சந்திரலேகா''வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், "சந்திரலேகா''வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு "டூப்''பாக ஆடினார்.

    ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.

    பின்னர் "மகாபலிசக்ரவர்த்தி'', "மின்மினி'', "தேவமனோகரி'', "பாரிஜாதம்'' முதலான படங்களில் நடித்தார்.

    1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பொன்முடி'' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.

    1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் "ஓர் இரவு'' படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார்.

    பின்னர் "சர்வாதிகாரி'', "ஏழை உழவன்'' போன்ற படங்களில் நடித்தார்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "திரும்பிப்பார்'' படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)

    வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.

    1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான "நாடோடி மன்ன''னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, "புருஷன்! புருஷன்! புருஷன்'' என்று பூஜை செய்வார்.

    இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், "இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். "நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்'' என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்'' என்றார்.

    சிவாஜி -சரோஜாதேவி நடித்த "இருவர் உள்ளம்'' படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.

    "அறிவாளி'' படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.

    மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.

    பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    "தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.

    "டவுன் பஸ்'' படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.

    நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த "அன்னையின் ஆணை''யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு "தேன்மொழி'' என்று அண்ணன் பெயரிட்டார்.

    அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, "உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு'' என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.''

    இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

    முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். "தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக''த்தின் நிறுவனத் தலைவர்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, "கலைவாணர் விருது'' உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
    பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

    1982-ல், "அக்னி சாட்சி'' என்ற படத்தை பாலசந்தர் தயாரித்தார். கதை -வசனம் -டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கவனித்தார். படம் சிறப்பாக அமைந்தும் சரியாக ஓடவில்லை.

    பின்னர் "அச்சமில்லை அச்சமில்லை'', "கல்யாண அகதிகள்'' ஆகிய படங்களை தயாரித்தார். அவள் ஒரு தொடர்கதை, இருகோடுகள் ஆகிய படங்களை கன்னடத்திலும், "வறுமையின் நிறம் சிவப்பு'', "அபூர்வ ராகங்கள்'' ஆகிய படங்களை இந்தியிலும் எடுத்தார்.

    1985-ல் அவர் கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்த "சிந்து பைரவி'' மகத்தான படமாக அமைந்தது.

    இதில் சிவகுமார், சுகாசினி, சுலக்ஷனா ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.

    கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாவற்றிலும் சிறந்த படமாக "சிந்து பைரவி'' அமைந்தது.

    இந்தப் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

    (1) சிறந்த நடிகை -சுகாசினி.

    (2) சிறந்த இசை அமைப்பாளர் -இளையராஜா.

    (3) சிறந்த பின்னணி பாடகி -சித்ரா. (பாடறியேன்... படிப்பறியேன்...'' பாட்டுக்காக.)

    சிறந்த நடிகை விருது பெற்ற சுகாசினி இதற்கு முன் பல தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும், பாலசந்தரின் படத்தில் நடிப்பது அதுவே முதல் படம். முதல் படத்திலேயே தேசிய விருது கிடைக்கக்கூடிய அளவுக்கு நடிக்க வைத்த பெருமை, பாலசந்தரையே சாரும்.

    சிந்து பைரவியின் வெற்றி பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "சிந்து பைரவி படத்தை தொடக்கத்தில் பார்த்த யாருமே இது இவ்வளவு வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றால், படத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அந்த அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்.

    விருது வாங்கும் அளவுக்கு இந்தப்படத்தை நான் கணிக்கவில்லை என்றாலும், "சிந்து'' என்ற கேரக்டரை நான் உருவாக்கியபோதே, இந்தப் பாத்திரம் ஏதோ பெரிதாக பண்ணப்போகிறது என்பது, என் உள்ளுணர்வுக்குத் தெரிந்தது.

    சில நேரங்களில் எனக்கு கேரக்டர்கள் ஒரு இன்ஸ்பிரேஷனைத் தரும். சில நேரங்களில் என் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் எதிர்பாராமல் இன்ஸ்பிரேஷன் தருவார்கள். அந்த வகையில் சிந்துவாக நடித்த சுகாசினி, அந்த இன்ஸ்பிரேஷனை ஓரளவு அதிகமாகவே தந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    தன் அற்புதமான நடிப்புத் திறமையாலும், வெகுளித்தனமான சிரிப்பாலும், சிந்து கேரக்டருக்கு ஒரு முழுமையைத் தந்து, சிந்து கேரக்டரை இமாலய உயரத்துக்கு உயர்த்தி சாதனை புரிந்து விட்டார். அவருக்கு தேசிய விருது கிடைத்தது முற்றிலும் பொருத்தமானது.''

    இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

    நடிகை சுகாசினி கூறியதாவது:-

    "தேசிய விருதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினால், என்னையே நான் ஏமாற்றிக் கொள்வது போல் ஆகிவிடும். இந்த கேரக்டருக்கு ஏதோ ஒரு விருது நிச்சயமாய் கிடைக்கும் என்று என் உள் மனம் கூறிக்கொண்டே இருந்தது.

    நான் இந்த விருதைப் பெறுவதற்கு முக்கிய காரணம் பாலசந்தர்தான்.

    முதலில் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று பாலசந்தர் சொன்னபோது, என் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஒவ்வொரு காட்சியையும் அவரே நடித்துக்காட்டி விளக்கி விடுவார் என்று கேள்விப்பட்டிருந்ததால், நமக்கு அதிக சிரமம் இருக்காது என்று எண்ணி ஒப்புக்கொண்டேன்.

    அவர் படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பெரிதுமë மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப்பெண்ணான நான், ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் இந்த பரிசைப் பெற்றது குறித்து பெருமைப்படுகிறேன்.''

    இவ்வாறு சுகாசினி கூறினார்.

    "சிந்து பைரவி'' கதாநாயகன் சிவகுமார் கூறியிருப்பதாவது:-

    "கிட்டத்தட்ட 200 படங்கள் செய்து விட்ட எனக்கு, அகில உலகிலும் கவுரவத்தைப் பெற்று தந்த படம் "சிந்து பைரவி.''

    இசையில் ஒருத்தி மயக்குகிறாள். இல்லறத்தில் ஒருத்தி மயக்குகிறாள். நடுவிலே, "ஜே.கே.பி.'' என்றொரு அற்புதமான பாத்திரத்தை எனக்குக் கொடுத்தார், பாலசந்தர்.

    இளையராஜா இசையும், ஜேசுதாஸ் அவர்களின் குரலும் "ஜே.கே.பி''யை முழுமையான கலைஞனாக மக்கள் முன் காட்ட பெரிதும் உதவின.

    பாலசந்தர் அவர்களின் படங்களில் நடிப்பது என்பது சுகானுபவம். காட்சிகளை அவர் கற்பனை செய்வதும், அதற்கு குறும்பும், புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரை தனித்துக்காட்டும்.

    கலை உலகில் அவர் ஒரு பீஷ்மர்.''

    இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.








    கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)

    டைரக்ட் செய்தவை: படங்கள், டெலிவிஷன் தொடர்கள் உள்படமொத்தம் 100.

    "நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்'' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.

    அவர் சிரித்துக்கொண்டே, "பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.

    1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.

    மேற்கண்டவாறு கூறிய பாலசந்தர், "படங்களின் பெயர்களைத்தான் கூறியிருக்கிறேனே தவிர, தரத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தவில்லை'' என்றார்.

    "உங்களுடன் தொடர்பு இல்லாத படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த 10 படங்கள் எவை?'' என்று கேட்டதற்கு, பாலசந்தர் கூறியதாவது:-

    தமிழில் கல்யாணபரிசு, திரும்பிப்பார், 16 வயதினிலே, தில்லானா மோகனாம்பாள், கன்னத்தில் முத்தமிட்டால்... ஆகிய படங்கள் பிடிக்கும்.

    ஆங்கிலத்தில் "ரோமன் ஹாலிடே'', "சைக்கோ'' ஆகிய படங்களும், இந்தியில் "தோ ஆங்கேன் பாராஹாத்'', "மொகல் ஏ ஆஜாம்'', "பிளாக்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.

    இவற்றையும் நான் தரத்தின்படி வரிசைப்படுத்தவில்லை.''

    இவ்வாறு கூறினார், பாலசந்தர்.

    பாலசந்தர் டைரக்ட் செய்யும் 101-வது படம் "பொய்.'' இதை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தின் கேசட் வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. கேசட்டை கமலஹாசன் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சிவகுமார், சரிதா, சுகாசினி உள்பட, பாலசந்தர் படங்களில் நடித்த அனைத்து நடிகர்-நடிகைகளும் விழாவில் கலந்து கொண்டனர்.

    திரை உலக மேதைகளில் ஏவி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோரிடம் பாலசந்தர் பெருமதிப்பு வைத்திருந்தார்.

    ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-

    "ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.

    படத்தின் `ரஷ்' போட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, `இங்கு ஒரு பிரேமை வெட்டு' என்பார். அதனால் என்ன மாற்றம் நேரப்போகிறது என்று நம்மால் அப்போது கற்பனை பண்ண முடியாது. அவர் கூறியபடியே செய்த பிறகுதான் அதனுடைய மகத்துவம் தெரியும்.

    "மேஜர் சந்திரகாந்த்'' படம் முடிந்தபின், நாங்கள் படம் முழுவதையும் பார்த்த பிறகு, படத்தைப்பற்றி என் கருத்தை ஏவி.எம். கேட்டார். "வசூலைப் பொறுத்தவரையில்தான் பயமாக இருக்கிறது'' என்றேன்.

    "படம் எப்படி வேண்டுமானாலும் ஓடட்டும். ஆனால் ஏவி.எம். சார்பில் இப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்றார், ஏவி.எம்.

    படம் வெளியானதும், ஒரு பத்திரிகை "இது காசுக்காக எடுத்த படம் அல்ல; ஆசைக்காக எடுத்த படம்'' என்று எழுதியது. ஆம்; ஏவி.எம்.கருத்தையே விமர்சனம் பிரதிபலித்தது. ஆம்; அவர் கணிப்பு வென்றது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.

    "எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்'' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார்.

    நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.

    சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்'' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.

    "சந்தர்ப்பம் இல்லை'' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.

    பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!

    கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    பாலசந்தர் தொடர்ந்து கூறியதாவது:-

    "கலாகேந்திரா'' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.

    நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.

    1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.

    எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு.

    என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டார்.

    இருகோடுகள் (1970), அபூர்வ ராகங்கள் (1974), தண்ணீர் தண்ணீர் (1982), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய படங்கள், சிறந்த மாநில மொழிப் படங்களுக்கான மத்திய அரசின் விருதைப் பெற்றன.

    பாமா விஜயம், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை ஆகிய படங்கள், திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மாநில அரசின் பரிசுகளை பெற்றன.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருதை 1973''-லும், "அண்ணா விருதை'' 1992-லும் பாலசந்தர் பெற்றார்.

    மத்திய அரசு 1987-ல் "பத்மஸ்ரீ'' விருது வழங்கியது.

    அழகப்பா பல்கலைக்கழகமும், சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டம் வழங்கி கவுரவித்தன.

    மற்றும் பிற மாநில அரசுகள், திரைப்பட அமைப்புகள், பத்திரிகைகள் வழங்கிய விருதுகளும், பரிசுகளும், பட்டங்களும் ஏராளம்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.
    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.

    பாலசந்தரும் குஷ்புவை வைத்து "ஜாதிமல்லி'' என்ற படத்தை உருவாக்கினார். சரிதாவின் கணவரான மலையாள நடிகர் முகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். புகழ் பெற்ற பாடகியாக இப்படத்தில் குஷ்பு நடித்தார். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் ஓட்டம் சுமார்தான்.

    இதே காலக்கட்டத்தில் பாலசந்தர் இயக்கிய "வானமே எல்லை'' சிறந்த படமாக அமைந்தது. ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை இப்படம் அலசியது. ரம்யாகிருஷ்ணன், மதுபாலா சிறப்பாக நடித்தனர்.

    இந்தப் படத்தில் ஒரு விசேஷம்: ஊனமுற்றவர்கள் மனம் தளரக்கூடாது, உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு அதிகாரியாக இருந்த எச்.ராமகிருஷ்ணன், கால் ஊனமுற்றவராக இருந்தும், படித்து முன்னேறி அரிய சாதனைகளை நிகழ்த்திய காட்சி, படத்தில் இடம் பெற்றது.

    இதன் பிறகு பாலசந்தர் இயக்கிய படம் "டூயட்'' (1994) இந்தப் படத்தின் மூலம்தான் பிரகாஷ்ராஜ் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகமானார். அவருடன் பிரபு இணைந்து நடித்தார்.

    தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தர் மீது மிகவும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர் பிரகாஷ்ராஜ். தன் படக்கம்பெனிக்கு, தான் நடித்த முதல் படத்தின் பெயரையே ("டூயட்'' மூவிஸ்) சூட்டியுள்ளார்.

    1996-ல் "கல்கி'' என்ற படத்தைத் தயாரித்தார் பாலசந்தர். கதாநாயகியை புரட்சிப் பெண்ணாகப் படைத்தார். அந்த வேடத்தில் ஸ்ருதி நடித்தார்.

    10 ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய கருத்தை, மிகவும் முன்னதாக சொன்னதால், அதை ரசிகர்கள் ஜீரணிக்க முடியவில்லை. படம் தோல்வி அடைந்தது.

    பாலசந்தர் தயாரித்த சில படங்களை வேறு டைரக்டர்கள் டைரக்ட் செய்தனர். அவற்றில் முக்கியமான படம் "ரோஜா'' (1992). மணிரத்தினம் இயக்கிய இந்தப் படத்தின் மூலமாகத்தான் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமானார்.

    காஷ்மீர் தீவிரவாதிகளைப் பற்றிய இப்படத்தில், அரவிந்தசாமியும், மதுபாலாவும் ஜோடியாக நடித்தனர். தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக "ரோஜா'' மதிப்பிடப்படுகிறது.

    இந்தக் காலக்கட்டத்தில், டெலிவிஷன் சீரியல்கள் தயாரிப்பதில் பாலசந்தர் கவனம் செலுத்தினார்.

    "ரெயில் சினேகம்'', "கையளவு மனசு'', "காசளவு நேசம்'', "காதல் பகடை'', "ப்ரேமி'', "அண்ணி'', "சஹானா'' உள்பட சுமார் 12 மெகா சீரியல்களை உருவாக்கியுள்ளார். இவற்றில் "அண்ணி'' 338 நாட்களும், "சஹானா'' 317 நாட்களும் ஒளிபரப்பாயின.

    பாலசந்தரின் நீண்ட திரை உலகப்பயணத்தில், 1982-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடந்த விபத்து, மிக பயங்கரமானதாகும்.

    நினைத்தாலே நெஞ்சை பதறச் செய்யும் அந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    தமிழில் கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்தை, இந்தியில் "ஜராசி ஜிந்தகி'' (வாழ்க்கையின் ஒரு துளி) என்ற பெயரில் தயாரித்தார், பாலசந்தர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு இமாசலபிரதேசத்தில், இயற்கை அழகு மிக்க "குளு'' பள்ளத்தாக்கில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், பாலசந்தர், கமலஹாசன், ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பி விட்டனர்.

    படப்பிடிப்பு குழுவினர் ஒரு பஸ்சில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்சில் 29 பேர் இருந்தனர்.

    வளைந்து வளைந்து சென்ற மலைப்பாதையில், பஸ் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக இன்னும் ஒரே ஒரு வளைவுதான். அதைத் தாண்டிவிட்டால், சம வெளிக்கு வந்து விடலாம்.

    அந்த சமயத்தில்தான், எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டது. எதிரே வந்த ஒரு காரின் மீது மோதி விடாமல் தடுக்க பஸ்சை திருப்பினார் டிரைவர்.

    பஸ் ஒரு பாறையில் மோதி, உருண்டு, அதள பாதாளத்தில் விழுந்தது.

    இந்த பயங்கர விபத்தில், ஒளிப்பதிவாளர் லோகநாதனின் சகோதரர் உள்பட 8 பேர் மாண்டனர். இணை இயக்குனர் அமீர்ஜான் படுகாயம் அடைந்தார். அப்போது உதவி நடன ஆசிரியையாக இருந்த கலாவும், உதவி இயக்குனராக இருந்த சுரேஷ்கிருஷ்ணாவும் அதிக காயம் இல்லாமல் தப்பினர்.

    இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை. எட்டுப் பேர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப்பட்டன.

    இந்த பயங்கர விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள பாலசந்தருக்கு நீண்ட காலம் பிடித்தது
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
    அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.

    ஜெயசித்ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் காக்கிநாடா. ஆனால் ஜெயசித்ரா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தந்தை மகேந்திரா. இவர் கால்நடை டாக்டராகவும், வக்கீலாகவும் இருந்தார். தாயார் ஜெயஸ்ரீ. ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்பதாகும்!

    ஜெயசித்ராவின் தாயாரும் நடிகைதான். அந்த காலக்கட்டத்தில் ஜெயஸ்ரீ பிரபல நடிகையாக விளங்கினார். அவர் 1954-ம் ஆண்டு "ரோஜலு மாராயி'' (தெலுங்கு "காலம் மாறிப்போச்சு'') படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அன்னதாத்தா, டைகர்ராமுலு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.

    1955-ம் ஆண்டு "மகாவீரபீமன்'' என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் திரவுபதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின்னர் "தெய்வபலம்'', "சிவகாமி'' உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மொத்தம் 40 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.

    திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு ஜெயஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். பின்னர் தனது குழந்தையான ஜெயசித்ராவை நன்றாக வளர்க்கவேண்டும், நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.

    இந்த நிலையில் 5 வயது குழந்தையாக இருந்தபோது "பக்தபோதனா'' என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி தேவிக்கு மகளாக ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா படிக்கும் போதே நாட்டியமும் கற்று வந்தார். பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுக்கொண்டபின், ஜெயசித்ராவின் 11-வது வயதில் நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிமகாலில் நடந்தது. நடன அரங்கேற்றத்துக்கு சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.

    முழுக்க முழுக்க படிப்பிலேயே ஆர்வம் காட்டிவந்த ஜெயசித்ராவிற்கு நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவரோ சினிமாவில் நடிக்க சிறிதும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

    இந்த நிலையில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த ஜெயசித்ராவை விட்டலாச்சாரியா தனது படத்தில் நடிக்கவைக்க நினைத்தார். ஒரு தெலுங்கு படத்திற்கு நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க வைக்க "கேமரா டெஸ்ட்'' எடுத்தனர். ஆனால், உருவத்தில் குமரிப்பெண்ணாக இருந்தாலும், குரல் இன்னும் குழந்தைக் குரலாக இருக்கிறது என்று கூறி, "நீ இப்போது நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க முடியாது. பிறகு வாய்ப்புத் தருகிறேன்'' என்று கூறிவிட்டார், விட்டலாச்சாரியார்.

    திரைத்துறைக்கு வந்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் சென்னை வித்யோதயா பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனது தாயார் என்னை படிக்கவைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நான் வழுவூர்ராமையா பிள்ளைமகன் சாம்ராஜிடம் பரதநாட்டியமும், சின்னசத்தியம் மாஸ்டர், எம்.எஸ்.சைவா ஆகியோரிடம் குச்சுப்புடி நடனமும் கற்றேன்.

    இந்தநிலையில்தான் விட்டலாச்சாரியாவின் பீதலபாட்லு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அப்போது நடிக்க ஆர்வம் இல்லை. அந்த சமயத்தில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். படத்தில் நடிப்பதற்காக கேமரா டெஸ்ட் எடுத்தனர். நான் பேசும்போது தொண்டை கீச், கீச் என்றதால், "இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை, பிறகு வாய்ப்பு தருகிறேன்'' என்றார், விட்டலாச்சாரியார்.

    அதன்பின்னர் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது அழைத்துச்சென்று, இரண்டு வசனங்களை பேசச்சொன்னார். நானும் பேசினேன். நான் பேசியதை கேட்டு சந்தோஷப்பட்ட டைரக்டர், "தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த கதாநாயகி கிடைத்துவிட்டார்'' என்று படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அழைத்து மகிழ்ச்சி பொங்க கூறினார்.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    குறத்தி மகனில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதுதான், "ஜெயசித்ரா'' என்ற பெயரை கோபாலகிருஷ்ணன் சூட்டினார்.

    இந்தப்படத்தில், குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞனை பணக்காரரின் மகளான ஜெயசித்ரா விரும்புவார். இந்தக் காதலை தந்தை ஏற்காததால், ஜெயசித்ரா குறத்தி வேடம் போட்டுக்கொண்டு காதலனுடன் சென்றுவிடுவார்.

    இப்படத்தில் ஜெயசித்ரா துருதுருவென்று நடித்து, ரசிகர்களிடம் `சபாஷ்' பெற்றார்.
    ×