செய்திகள்
காஷ்மீர் தீவிரவாத குழுக்களில் 7 மாதங்களில் சேர்ந்த 70 இளைஞர்கள்: பாதுகாப்பு படையினர் தகவல்
காஷ்மீரில் செயல்ப்பட்டு வரும் தீவிரவாத குழுக்களில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 70 இளைஞர்கள் சேர்ந்துள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அடிக்கடி காஷ்மீரில் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால், இந்திய ராணுவம் அவர்களது தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரில் செயல்ப்பட்டு வரும் தீவிரவாத குழுக்களில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 70 இளைஞர்கள் சேர்ந்துள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள புலவாமா, சோபியான் மற்றும் குல்காம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக இளைஞர்கள் சேர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக, பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ’’இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாத காலத்தில் 70 இளைஞர்கள் தீவிரவாத குழுக்களில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில் 88 பேர் இந்த குழுக்களில் சேர்ந்தனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தீவிரவாத குழுக்களில் சேர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2015ல் 66 பேரும், 2014ல் 53 பேரும், 2013ல் 16 பேரும், 2012ல் 21 பேரும், 2011ல் 23 பேரும், 2010ல் 54 பேரும் சேர்ந்து பயிற்சி பெற்றனர் என தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர், அனந்தநாக், குல்காம், சோபியான், பட்காம், புலவாமா ஆகிய மாவட்டங்களில் தான் என்கவுண்டர் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளன. மேலும் புலவாமா மாவட்டம் தான் ஹிஸ்புல் முஜாஹிதின் கமாண்டர் புர்கான் வானியின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story