செய்திகள்
சீர்காழியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சீர்காழி:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயன்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் செல்லையன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சந்திரசேகர், பேரூர் முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன், வக்கீல் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பரணிதரன், கார்த்திக், நடராஜன், கல்யாணசுந்தரம், தமிழ்செல்வன், பாண்டியன், பிரகாசம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.