செய்திகள்
கன்னியாகுமரி அருகே மாயமான 4 வயது சிறுமி மீட்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரம், சுண்டன்பரப்பு நாச்சிமார் குளக்கரையில் வசித்து வருபவர் கணேசன். இவரது மனைவி மரியா.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கணேசன் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்த போது 4 வயதே ஆன 2–வது குழந்தையை காணவில்லை. பதறிபோன அவர் பல இடங்களிலும் தேடி பார்த்தார். எங்கு தேடியும் குழந்தையை காணவில்லை. எனவே அவர் இது பற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை நாங்குநேரி பகுதியில் ஒரு சிறுமி அழுது கொண்டிருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அவர்கள் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த குழந்தையை மீட்டு நெல்லையில் உள்ள சரணாலயத்தில் சேர்த்தனர்.
இந்த தகவல் சமூக ஆர்வலர்கள் மூலம் வாட்ஸ்–அப்பில் பரவியது. இது கன்னியாகுமரி போலீசாருக்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் வாட்ஸ்– அப்பில் வெளியான குழந்தையின் படத்தை கணேசனிடம் காட்டினர். அவர் குழந்தையை அடையாளம் காட்டியதை தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் நெல்லைக்கு விரைந்து சென்றனர்.
அங்கு காப்பகத்தில் இருந்த சிறுமியை மீட்டனர். அவர் போலீசாரிடம் கூறியபோது வீட்டில் இருந்த தன்னை ஒரு நபர் கடத்தி சென்றதாகவும், பின்னர் தனக்கு புது சட்டை மற்றும் பொருட்கள் வாங்கி கொடுத்து அழைத்து சென்றதாகவும் கூறினார்.
சிறுமிக்கு புது சட்டை வாங்கி கொடுத்து கடத்தி சென்ற நபர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.