சினிமா
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
நடிகை ரீமா கல்லிங்கல் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்...
“சமூக வலைத்தளங்களில் பெண்களை அவமதிப்பது அதிகரித்துள்ளது. ஒரு நடிகையின் பேஸ்புக் பக்கத்தில் கமாண்ட் பகுதிக்கு சென்று பார்த்தால், நாங்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தி இருப்பார்கள்.
நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் எங்களுக்கு கிடைக்கிறது. கேட்டால், சேர்டிலைட் உரிமை உள்ளிட்ட விஷயங்களில் நடிகைகளுக்கு மதிப்பே இல்லை என்கிறார்கள்.
ஒரு நடிகர் 20 வயது முதல் 70 வயதாக இருந்தாலும், திருமணம் ஆகி இருந்தாலும், ஆகா விட்டாலும், குழந்தைகள், பேரக் குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்காக கதை எழுதுகிறார்கள். அவருடைய தகுதியை உயர்த்த படம் எடுக்கிறார்கள். இதற்காக நானும் ஒரு கலை உலகை சேர்ந்தவர் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் ஒரு நடிகையாக சந்தோஷப்பட முடியவில்லை.
ஒரு நடிகை தனது சொந்த வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரது சினிமா வாழ்க்கையை பாதிக்கிறது. திருமணம் செய்தால், குழந்தை பெற்றால், விவாகரத்தானால்... இப்படி ஒவ்வொரு விஷயமும் நடிகையின் திரை உலக பயணத்தின் எதிர் காலத்தை பாதிக்கிறது” என்றார்.