சினிமா
விஜய்க்காக காத்திருக்கிறாரா மோகன்ராஜா?
‘மெர்சல்’ படத்தையடுத்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இவருடைய அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று சமூக வலைத்தளங்களில் உரையாடல் நடைபெற்று வருகிறது. விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படத்தை இயக்கிய மோகன் ராஜா இயக்குவார் என்றும், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்குவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் விஜய்யை சந்தித்த மோகன்ராஜா ‘நீண்ட காலம் கழித்து நண்பர் விஜய்யை சந்தித்தேன். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். நிறைய பேசினோம். ‘வேலைக்காரன்’ படம் பற்றி அவர் பெருமைப்பட்டார். அது தான் எனது சிறந்த தருணங்களில் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக டுவிட்டரில் ரசிகர்களுடன் பேசிய மோகன் ராஜாவிடம் ரசிகர்கள், ‘விஜய் படத்தை மீண்டும் இயக்குவீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த மோகன்ராஜா, ‘காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.
இதனால், விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.