என் மலர்

    சினிமா

    தேசிய விருதை பெறுவதால் பெருமையுறுவது நானல்ல; மொழிதான்: கவிஞர் வைரமுத்து
    X

    தேசிய விருதை பெறுவதால் பெருமையுறுவது நானல்ல; மொழிதான்: கவிஞர் வைரமுத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    7-வது முறையாக தேசிய விருது வென்றுள்ள கவிஞர் வைரமுத்து தனது மகிழ்ச்சியை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை கீழே பார்ப்போம்.
    சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த பாடலாசிரியர் விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மதுரை படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வைரமுத்துவுக்கு இது 7-வது தேசிய விருதாகும்.

    இதுகுறித்து அவர் கூறும்போதும், இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன்.



    அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே.

    ‘தர்மதுரை’ படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய்சேதுபதி - தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதில் நாகரிகம் அடைகிறேன்.

    இந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும். தற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகிவருகிறது. காதல் தோல்வி - மன அழுத்தம்- அச்சம்- வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன. எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்தவேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துகிறாள்



    பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமல்ல. தன்முனைப்பும் தன்னெழுச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதே கலையின் நோக்கம். இதைச் சொல்லும் படங்களும் பாடல்களும் களிப்பூட்டுவதோடு மக்களுக்குக் கற்பிக்கவும் செய்கின்றன நல்ல சிந்தனைக்கும் மொழிவளத்துக்கும் இடமளிக்கிற பாடல்கள் எல்லாப் படங்களிலும் இடம் பெறுவது நிகழ்காலக் கலையின் கடமையாகிறது.

    இந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது. புதிய பொறுப்போடும் விருப்போடும் என் பயணத்தைத் தொடரத் தமிழ்மக்களின் வாழ்த்துக்களையே வரமாய்க் கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கவிஞர் வைரமுத்து இதுவரை தேசிய விருது பெற்ற படங்களும் வருடங்களும் பின்வருமாறு:  1986 - முதல் மரியாதை, 1993 - ரோஜா, 1995 - கருத்தம்மா, பவித்ரா, 2000 - சங்கமம், 2003 - கன்னத்தில் முத்தமிட்டால், 2011-தென்மேற்கு பருவக்காற்று, 2017 - தர்மதுரை.

    கவிஞர் வைரமுத்துவுக்கு தர்மதுரை படத்தில் தேசிய விருது பெற்றுக்கொடுத்த பாடல் இதுதான்.


    Next Story
    ×