என் மலர்

    சினிமா

    அவன் அவள் அது படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா
    X

    "அவன் அவள் அது'' படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் `அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். லட்சுமியின் கருவை சுமந்து குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும் "வாடகைத் தாயாக'' ஸ்ரீபிரியா நடித்துள்ளார். வெள்ளி விழா கொண்டாடிய படம் இது.
    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் `அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். லட்சுமியின் கருவை சுமந்து குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும் "வாடகைத் தாயாக'' ஸ்ரீபிரியா நடித்துள்ளார். வெள்ளி விழா கொண்டாடிய படம் இது.

    இந்தப் படத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு வந்தபோது, படத்தில் லட்சுமியும் இருக்கிறார் என்பது தெரிந்து ரொம்பவும் மகிழ்ந்திருக்கிறார். அந்த நேரம் ஏற்பட்ட பரவசத்தை ஸ்ரீபிரியாவே பகிர்ந்து கொள்கிறார்:-

    "எனக்கு லட்சுமியை ரொம்ப பிடிக்கும். அவங்களோட "சட்டைக்காரி'' படத்தையெல்லாம் ரொம்ப ரசித்துப் பார்த்திருக்கிறேன். நடிப்பில் தனித்துவம் வாய்ந்தவர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு வேண்டியவர்களே கொஞ்சம் பயமுறுத்தினார்கள். "லட்சுமி பிரமாதமான நடிகை. அவர் கூட நடிக்கும்போது நீ காணாமல் போயிடப்போறே'' என்று பயமுறுத்தினார்கள். ஆனால் படத்தில் நடிக்கும்போது நட்பில் நாங்கள் ரொம்பவே ஒன்றிப் போனோம். படத்தில் `ஆச்சி'யும் இருந்தார். மூன்று பேரும் செட்டில் இருந்து விட்டால் அரட்டை! அரட்டை! ஒரே அரட்டைதான்!

    ஒரு கட்டத்தில் எங்கள் லூட்டியை தாங்கிக்கொள்ள முடியாத டைரக்டர் முக்தா சீனிவாசன், "உங்களை கட்டி மேய்க்க என்னால் முடியவில்லை. கடவுள் சத்தியமா உங்க மூணு பேரையும் ஒண்ணா வெச்சு இனிமே படம எடுக்கவே மாட்டேன். எனக்கு வேலையே நடக்க மாட்டேங்குது'' என்றார்.

    எந்த நேரத்தில் அப்படிச் சொன்னாரோ அதன் பிறகு நாங்கள் மூன்று பேரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க முடியாமலே போய்விட்டது. ஒன்று நானும் ஆச்சியும் இருப்போம். இல்லேன்னா லட்சுமியும், நானும் இருப்போம். எப்படியோ டைரக்டர் முக்தா சீனிவாசன் சொன்னது நடந்துவிட்டது.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த முதல் படம் "ஆண்பிள்ளை சிங்கம்.''

    திட்டமிட்டு படமாக்கும் ஆற்றல் இவரிடம் இருப்பதை ஸ்ரீபிரியா தெரிந்து கொண்டார். தேவையில்லாமல் நடிகர் - நடிகைகளை காக்க வைக்கிற பழக்கமும் இவருக்கு இருந்ததில்லை. தொழிலில் இவர் காட்டிய ஈடுபாடு ஸ்ரீபிரியாவை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து இவரது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இப்படி அவர் "ஒரு கொடியில் இரு மலர்கள்'', "சொந்தமடி நீ எனக்கு'', "எனக்குள் ஒருவன்'', "மோகம் முப்பது வருஷம்'' என படங்களை தொடர்ந்தார்.

    இதில், "மோகம் முப்பது வருஷம்'' படத்தில் மட்டும், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் ஸ்ரீபிரியாவுக்கு திருப்தி இல்லை. தைரியமாக, "இந்த கேரக்டரில் நான் நடிக்கத்தான் வேண்டுமா?'' என்று டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடமே கேட்டும்விட்டார்.

    இந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. அதற்காக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, இப்படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதிய மகேந்திரன் அவரை சந்தித்தார். "படத்தில் 3 பெண் கேரக்டர்கள் இருந்தாலும் நீங்கள் நடிக்கிற பாமா கேரக்டரோடுதான் ரசிகர்கள் ஒன்றிப் போவார்கள். படம் வெளிவரும்போது ரசிகர்கள், பாமா பற்றிதான் பேசிக்கொண்டு வருவார்கள். அந்த அளவுக்கு வித்தியாசமும் அழுத்தமும் கொண்ட கேரக்டர்'' என்று விளக்கம் தந்தார்.

    அதன் பிறகு பாமா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஸ்ரீபிரியா. அவர் குணமானதும் படப்பிடிப்பு தொடங்கியது. படம் ரிலீசானபோது மகேந்திரன் சொன்னது போலவே நடந்தது. படம் பார்த்த ரசிகர்கள் பாமா கேரக்டர் பற்றியே பேசினார்கள்.

    ஸ்ரீபிரியாவை கவர்ந்த இன்னொரு இயக்குனர் டி.என்.பாலு. டைரக்டர் ராமண்ணாவிடம் உதவியாளராக இருந்தபோதே "நான்'', "மூன்று முகம்'' போன்ற வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர். இவர் டைரக்டரானதும் இயக்கிய "சட்டம் என் கையில்'' படத்தில் கமலஹாசன் கதாநாயகன். அவருக்கு ஜோடி ஸ்ரீபிரியா.

    டி.என்.பாலு பற்றி ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னார்:-

    "பாடல் காட்சியின்போது எனக்கு சரியாக வாயசைக்க வராது என்பதை கண்டுபிடித்து திருத்தியவர் இவர்தான். பாட்டு சீனில் வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருப்பேன். `இப்படிச் செய்தால் நீ பாடுகிற மாதிரி திரையில் எப்படித் தெரியும்? முதலில் அதை சரி பண்ணு' என்றார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டிடம் இருக்கும் திறமையை பட்டியலிட்டு பாராட்டும் குணம் இருந்த அளவுக்கு, குறைகளை பக்குவமாக சொல்லி சரி செய்யும் பண்பும் இவரிடம் இருந்தது. இவரது "ஓடி விளையாடு தாத்தா'' காமெடிப்படம் எனக்கு காமெடியில் ரொம்ப நல்ல பெயர் தேடித் தந்தது. "நல்லதுக்கு காலமில்லை'' படத்திலும், எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தார்.

    கமல் நடித்த "சங்கர்லால்'' படத்தை, இவர் இயக்கியபோதுதான் எனக்கும் அவருக்கும் சின்ன பிரச்சினை. படத்தில் கமல் ஜோடியாக என்னை ஒப்பந்தம் செய்தவர், நான் இரண்டொரு தடவை தேதிகளை மாற்றினேன் என்பதற்காக, உணர்ச்சிவசப்பட்டு கவுன்சிலில் என் மீது புகார் கொடுத்துவிட்டார். பிறகு பிரச்சினை சுமூகமாக தீர்ந்து போயிருந்தாலும், நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.

    திடீரென அவர் இறந்தபோது, மனது தாங்காமல் அஞ்சலி செலுத்தப் போனேன். அப்போது என்னை கட்டிக்கொண்டு அழுத அவர் மனைவி, "அய்யோ அது (ஸ்ரீபிரியா) எவ்வளவு நல்ல பொண்ணு. நான் அவசரப்பட்டு புகார் கொடுத்து அது மனதை புண்படுத்தி விட்டேனேன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரே!'' என்று அழுதார். ஏற்கனவே சோகத்தில் இருந்த நான், அவங்க அப்படிச் சொன்னதும் உடைந்து கதறிவிட்டேன்.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    இந்தியில் சஞ்சீவ்குமார்- ஷர்மிளா தாகூர் இணைந்து நடித்த படம் "மாசூன்.'' இந்தப் படத்தில் நடித்த இருவருக்குமே சிறந்த நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை தமிழில் "வசந்தத்தில் ஓர் நாள்'' என்ற தலைப்பில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீபிரியா நடித்து முடித்தபோது கைதட்டி பாராட்டினார்.

    "நிஜமாகவே உயரத்தில் மட்டுமல்ல... பண்பிலும் உயர்ந்தவர் அவர்'' என்று திருலோகசந்தரைப் பாராட்டிய ஸ்ரீபிரியா, மேலும்

    சொன்னார்:-"ஏவி.எம். ஸ்டூடியோவில் சின்னத்திரை தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தேன். நான் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த இடத்தைத் தாண்டி ஒரு கார் வேகமாக சென்றது. திடீரென அந்தக் கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து உயரமான மனிதர் ஒருவர் என்னை நோக்கி வந்தார். பார்த்தால் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர்! என்னைப் பார்த்ததும், "என்னம்மா எப்படி இருக்கீங்க?'' என்று பாசத்துடன் விசாரித்தார். என்னைப் பார்த்ததும், வந்த வேலையை கூட தள்ளிவைத்துவிட்டு தேடிவந்து நலம் விசாரிக்கும் அந்த மாதிரியான அன்பை யாரிடம் எதிர்பார்க்க முடியும்?

    ஒருமுறை அவர் இயக்கிய, சிவாஜி - கே.ஆர்.விஜயா நடித்த "பாரத விலாஸ்'' படத்தை, டிவி.யில் பார்த்தேன். தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளை அவர் அமைத்திருந்தார். மனம் நெகிழ்ந்துபோய், உடனே அவர் போன் நம்பரை தேடிப்பிடித்து பாராட்டினேன். "படம் இயக்கி இத்தனை வருஷம் கழித்தும் பாராட்டுகிற பண்பு உன்போன்ற சிலருக்கு இருப்பதை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார். "தெய்வமகன்'' போன்ற படங்கள் எப்போதும் சினிமாவில் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்'' என்றார், ஸ்ரீபிரியா.
    Next Story
    ×