என் மலர்

    சினிமா

    நாகின் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் நீயா
    X

    "நாகின்" படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் "நீயா"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

    "நாகின்" என்ற இந்திப்படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத்தயாரிப்பாளர் ஆக்கியது.

    வைஜயந்திமாலா இந்திப்படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது "நாகின்" என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை வைத்து அற்புதமான மெட்டுகளில் இசை அமைத்திருந்தார், ஹேமந்தகுமார்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு "நாகின்" என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப்படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

    "வீடியோ சிடி" எல்லாம் வராத காலம் அது.

    சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயாருடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா. படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்து ரசித்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் "நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்" என்று கூறினார். "அவ்வளவுதானே! கவலையைவிடு" என்று அம்மா சொன்னார்.

    அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது. "நாகின்" படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை ஸ்ரீபிரியாவின் தாயார் வாங்கினார். அப்போது பிசியாக இருந்த டைரக்டர் துரையை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது முன்னணியில் இருந்த கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என 6 ஹீரோக்கள் நடித்தனர்.

    இந்தப் படத்தில் கமல் நடித்த கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார். இந்திப்படத்தில் ரேகா நடித்த "பாம்பு" கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திரமோகனும் நடித்தார்கள். இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டியூனில் தமிழிலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள். "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா" என்பதுதான் அந்தப் பாடல்.

    1979 பொங்கலுக்கு வெளிவந்த "நீயா" பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் "திரிசூலம்" படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார்.

    "நீயா!" படத்தை பார்த்து விட்டு, ஸ்ரீபிரியாவிடம் சிவாஜிகணேசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டார். அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் "நீயா" படம் பார்த்து விட்டு மறுநாள் "திரிசூலம்" படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். "படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடற அந்தப் பையன் (சந்திரமோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் 'கெட்அப்'பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?" என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்" என்றார், ஸ்ரீபிரியா.

    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சில படங்களில் ஸ்ரீபிரியா நடித்து இருக்கிறார். அவற்றில் முக்கியமானது "தசாவதாரம்" படம். இந்தப் படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவை கேட்டார் இயக்குனர். ஸ்ரீபிரியா மறுத்துவிட்டார்.

    "நடிகர் திலகம் சிவாஜி எப்பேர்ப்பட்ட நடிகர்! அவர் ராமாயண நாடகத்தில் நடித்தபோது கைகேயி வேடத்தில் நடித்தார். ஒரு ஆர்ட்டிஸ்ட் என்றால் எந்த கேரக்டரிலும் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உன்னால் இந்த சூர்ப்பனகை கேரக்டரிலும் நடித்து பெயர் வாங்க முடியும்" என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார். இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்ததாலும், எந்த கேரக்டரிலும் தன்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையாலும் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க சம்மதித்தார், ஸ்ரீபிரியா.

    கதாநாயகியாக திரைக்கு அறிமுகமாகியிருந்தாலும் காமெடி, அதிரடி என சகல விஷயமும் தொட்டவர், இவர். கமலஹாசனுடன் நடித்த "பட்டிக்காட்டுராஜா" படத்தில் 'வில்லி' கேரக்டரில் கூட வந்தார். அதுமாதிரி "தொட்டதெல்லாம் பொன்னாகும்" படத்தில் கதாநாயகன் ஜெய்சங்கர் என்றாலும், படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த மாதிரியான 'சவால்' கேரக்டர்கள், சின்ன கேரக்டர்களிலும் நடித்த அனுபவம் இருந்ததால் சூர்ப்பனகை கேரக்டரையும் சிறப்பாகவே செய்தார், ஸ்ரீபிரியா.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "பெரியப்பா தண்டாயுதபாணி பிள்ளை மீது டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாருக்கு பிரியமும் அதிகம். மரியாதையும் அதிகம். அந்த அடிப்படையில் தன்னை 'சித்தப்பா' என்றே அழைக்கச் சொல்வார். ஆரம்பத்தில் வாய் தவறி 'சார்' வந்தாலும், "நான் உன்னிடம் என்ன சொல்லியிருக்கிறேன்?" என்று குரலில் கடுமை காட்டி கேட்பார். வசனங்களை இவர் சொல்லித் தருவதே தனி அழகு. காட்சியை விவரிக்கும்போதே அவரிடம் இருந்து வசனங்கள் வந்து விழும். ஒத்திகையின்போது பேசவேண்டிய வசனத்தை சொல்லிக் கொடுப்பவர், மறுபடி 'டேக்'கின் போது இன்னமும் கூடுதலாக சில வசனங்களை சேர்ப்பார். ஆனால் அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட வசனங்களும் அற்புதமாக இருக்கும்.

    தசாவதாரம் படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும்போதே, "வாய் வலிக்குது" என்று அவரிடம் கிண்டல் செய்திருக்கிறேன். வசனம் அதிகம் இருப்பதைப்பற்றி கிண்டல் செய்கிறேன் என்பதை அவரும் புரிந்து கொள்வார். அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அதுபற்றி பேசாமல் சிரிக்க மட்டும் செய்வார்.

    அவர் சொன்னபடி தசாவதாரம் படத்தில் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து, "வாயில்லாப்பூச்சி", "பாலாபிஷேகம்", "உள்ளத்தில் குழந்தையடி" உள்பட ஏழெட்டு படங்களில் நடித்தேன். எல்லாமே எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.

    நான் கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட டைரக்டர்களில் இவரும் ஒருவர். "நாளை பூஜை. படத்தில் நீயும் இருக்கிறாய். பூஜைக்கு வந்துவிடு" என்பது மட்டுமே இவரது திடீர் அழைப்பாக இருக்கும். ஒரு படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருக்கிறதோ அத்தனை கேரக்டர்களையும் உயிரோட்டமாகத் தரும் இயக்குனர் என்ற வகையில் நான் மட்டுமல்ல, பல நடிகர் - நடிகைகள் இவரிடம் 'படத்தில் தங்களுக்கு என்ன கேரக்டர்' என்று கேட்கமாட்டார்கள்.

    சமீபத்தில் நான் இயக்கும் டெலிவிஷன் சீரியல் ஒன்றுக்காக கற்பகம் ஸ்டூடியோவுக்குப் போயிருந்தபோது குதூகலத்துடன் என் அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டார். "நீ டைரக்ட் பண்றதை பார்க்கும்போது எனக்கே நடிக்கணும் போல இருக்கு" என்று சொல்லி என்னை பாராட்டினார். அப்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது."

    இவ்வாறு ஸ்ரீபிரியா குறிப்பிட்டார். 
    Next Story
    ×