என் மலர்

    சினிமா

    முருகன் காட்டிய வழி ஸ்ரீபிரியாவின் முதல் படம்
    X

    "முருகன் காட்டிய வழி'' ஸ்ரீபிரியாவின் முதல் படம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பி.மாதவன் டைரக்ட் செய்த "முருகன் காட்டிய வழி'' மூலமாக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஸ்ரீபிரியா, தொடக்கத்தில் வசனம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
    பி.மாதவன் டைரக்ட் செய்த "முருகன் காட்டிய வழி'' மூலமாக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஸ்ரீபிரியா, தொடக்கத்தில் வசனம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

    சினிமா ஆசை இல்லாமல் சர்ச் பார்க் கான்வென்டில் படித்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது.

    "நல்ல வாய்ப்பு வரும்போது சொல்லி அனுப்புகிறேன்'' என்று கூறியிருந்த டைரக்டர் பி.மாதவன், ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு அனுப்பினார்.

    ஸ்ரீபிரியா அவரைச் சந்தித்தார். மாதவன் "முருகன் காட்டிய வழி''யின் கதையைச் சொன்னார். ஏவி.எம்.ராஜனின் தங்கை வேடத்தில் ஸ்ரீபிரியா நடிக்க வேண்டும் என்று கூறினார்.

    சிறு வேடங்களில் நடிப்பதில் ஸ்ரீபிரியாவுக்கு ஆரம்பத்திலேயே விருப்பம் இல்லை. ஆனால், "முருகன் காட்டிய வழி''யில் ஏவி.எம்.ராஜனுக்கு தங்கை என்றாலும், படத்திலேயே மிக முக்கியமான பாத்திரம். எனவே ஸ்ரீபிரியா ஒப்புக்கொண்டார்.

    மேக்கப் டெஸ்ட்டின்போது, ஸ்ரீபிரியா கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. நெற்றி சின்னதாக இருப்பதாகக் கூறி, முன்புற நெற்றி முடியை பிளேடு வைத்து அகற்றி, மேக்கப் டெஸ்ட் நடத்தினார்கள்! இதனால் பள்ளிக்கு பஸ்சில் போய் வந்து கொண்டிருந்த ஸ்ரீபிரியா, பஸ்சில் ஏறியதும் கையிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தால் நெற்றியை மறைத்துக்கொண்டு பயணம் செய்தார்!

    பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் சமயங்களிலும் இந்த `முகமறைப்பு' தொடர்ந்து இருக்கிறது.

    முகத்தைக்கூட காட்ட முடியாத சோகம், ஸ்ரீபிரியாவுக்குள் ஒரு கட்டத்தில் கோப அலைகளை எழுப்பியது. தன்னை சினிமாவில் நடிக்க அழைத்த டைரக்டர் பி.மாதவன் மீதே கோபப்பட வைத்தது.

    ஒருநாள் பள்ளி முடிந்ததும், நேராக டைரக்டர் பி.மாதவன் ஆபீசுக்கு போனார். ஏதோ, பட விஷயமாகப் பேச வந்திருப்பதாக மாதவன் நினைத்தார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு நடிக்க விருப்பமில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று கெஞ்சல் குரலில் சொன்னார்.

    "வீணாக பயப்படாதே. மேக்கப் டெஸ்ட் `ஓகே' ஆகிவிட்டது. உன்னை நன்றாக நடிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!'' என்று மாதவன் கூறினார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்ல, கோபம் அடைந்தார், மாதவன்.

    "எத்தனையோ பேர் நடிப்பதற்கு ஆசைப்பட்டு தவம் கிடக்கிறார்கள். உனக்கு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இப்போது நீ மறுத்துவிட்டால், பிறகு இந்த வாய்ப்பு மீண்டும் வராது!'' என்று கூறினார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை சார்!'' என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

    ஆனால் டைரக்டர் மாதவன் விடுவதாக இல்லை. 2 மாதம் கழித்து, ஸ்ரீபிரியாவுக்கு மீண்டும் அழைப்பு அனுப்பினார். `ஏன் திரும்பவும் அழைக்கிறார்' என்று யோசித்தபடியே அவரைப் போய் சந்தித்தார்.

    "என்ன ஆனாலும் சரி. நடிக்கமாட்டேன் என்று தைரியமாக கூறிவிட்டுப் போனாய் அல்லவா? அந்த தைரியம்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது. என் கதையின் அந்தக் கேரக்டர், உனக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். பிடிவாதம் செய்யாமல் நடி!'' என்று மாதவன் கூறினார்.

    ஸ்ரீபிரியாவின் தாயாரும், மாதவன் கருத்தை ஆதரித்தார். "டைரக்டர் சார் இவ்வளவு சொல்லும்போது நீ மறுப்பது சரியல்ல'' என்று எடுத்துச் சொன்னார். எனவே, நடிப்பதற்கு சம்மதித்தார், ஸ்ரீபிரியா.

    முதல் படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "நடிப்பது என்று முடிவு எடுத்ததும், அதற்கேற்ப என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன். எங்கள் சர்ச் பார்க் பள்ளியின் எதிரே `சினிமா கட்- அவுட்'கள் வைப்பார்கள். அதில் பிரபல நடிகர் -நடிகைகள் படங்கள் பெரிய அளவில் பளிச்சென்று காணப்படும். `நாம் இப்போது நடிக்கப்போகிறோம். இனி நமக்கும் இதே இடத்தில் `கட்அவுட்' வைப்பார்கள்!' என்று எண்ணிக் கொண்டேன்.

    அன்றைய பிரபல சினிமா பத்திரிகைகளில் என் படத்தை அட்டையில் பிரசுரித்தார்கள். அதனால், பள்ளி மாணவிகள் மத்தியில் என் புகழ் பரவியது.''- இப்படிச் சொன்ன ஸ்ரீபிரியா, முதல் படம் "முருகன் காட்டிய வழி''யில் வசனம் பேசத்தான் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார்.

    டைரக்டர் பி.மாதவனிடம் உதவியாளர்களாக இருந்த தேவராஜ் -மோகன் இருவரில் மோகன்தான் ஸ்ரீபிரியாவுக்கு வசனம் பேச கற்றுக் கொடுத்தார். அதுவரை தமிழில் பேச, எழுதத் தெரியாத ஸ்ரீபிரியாவுக்கு தமிழில் சரளமாக பேசிப்பழக அவர் கொடுத்த வசனம் "தங்கப்பதக்கம்'' படத்தில் சிவாஜியிடம் மருமகளாக நடிக்கும் பிரமிளா பேசும் வசனம்.

    `மாமா! காஞ்சுப்போன நதியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா?''

    இந்த வசனத்தை ஸ்ரீபிரியா சொன்ன பிறகு, படத்துக்கான 2 பக்க வசனத்தை படித்துக்காட்டினார், மோகன்.

    இந்த வசனத்தை ஸ்ரீபிரியா தயங்கித் தயங்கி பேசினார். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த டைரக்டர் பி.மாதவன், `பொண்ணு தேறுமா?' என்பது போல் மோகனிடம் கை அசைவில் கேட்டிருக்கிறார். மோகனோ, உதட்டைப் பிதுக்கி `தேறாது' என்பதுபோல் சொல்லியிருக்கிறார்!

    ஆனால், வெகு விரைவிலேயே எல்லோரும் ஆச்சரியப்படும்படி வசனத்தை தெளிவான உச்சரிப்புடன் பேசத்தொடங்கினார், ஸ்ரீபிரியா.

    "எனக்கு தமிழ் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இரண்டு தடவை படித்துக் காட்டினால் போதும். அப்படியே மனதுக்குள் கிரகித்துக் கொண்டு திருப்பிச் சொல்லிவிடுவேன். மோகன் சார் எனக்கான வசனத்தை இரண்டாவது தடவையாகச் சொன்னபோது, அப்படியே கடகடன்னு திருப்பிச் சொல்லி, அவரை ஆச்சரியப்படுத்தி விட்டேன். நான் பேசி முடித்ததும் கேமராமேன் பி.என்.சுந்தரம் சார் கைதட்டி பாராட்டினார்'' என்று `மலரும் நினைவு'களை பகிர்ந்து கொண்டார், ஸ்ரீபிரியா.

    இதன் பிறகு ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அங்கு நடிகர் சிவகுமார் வந்தார்.

    "படத்தின் சில காட்சிகளை டைரக்டர் மாதவன் சாருடன் சேர்ந்து பார்த்தேன். நன்றாக நடித்திருக்கிறாய். வசனத்தையும் அழகாகப் பேசியிருக்கிறாய். எதிர்காலத்தில் சிறந்த நடிகையாக வருவாய்!'' என்று வாழ்த்தினார்.

    பூரித்துப்போனார், ஸ்ரீபிரியா.

    Next Story
    ×