என் மலர்

    சினிமா

    மூகாம்பிகை மீது கன்னடப் பாடல்கள்! இளையராஜா பாடினார்
    X

    மூகாம்பிகை மீது கன்னடப் பாடல்கள்! இளையராஜா பாடினார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.
    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இரட்டையர்களில், தேவராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். "சிட்டுக்குருவி'' படத்தில் காதலனும், காதலியும் தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு சூழ்நிலையில் ஒரு பஸ்சில் இருவரும் அருகருகே அமர்ந்து போகிறார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

    இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின் `கவுண்ட்டர் பாயிண்ட்டை உபயோகிக்க முடிவு செய்தேன்.

    இதுபற்றி தேவராஜிடம் விளக்கி சம்மதமும் வாங்கிவிட்டேன்.

    கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது டியுனை வாசிக்கச் சொல்லி கேட்டார். "ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியுன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "அண்ணே! இரண்டு டியுனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டியுனுக்கு இன்னொரு டியுன் பதில் போலவும், அமையவேண்டும். அந்த பதில் டியுனும் தனியாகப்பாடினால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல் ஒரே பாடலாக ஒலிக்கவேண்டும்'' என்றேன்.

    பதிலுக்கு வாலி, "என்னய்யா நீ! இந்த நட்ட நடு ராத்திரியில `சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே! முதல்ல ஒரு "மாதிரி'' பாடலை சொல்லு!'' என்றார்.

    உடனே வேறு ஒரு பாடலைப்பாடி விளக்கினேன். நான் ஒரு டியுனையும், அமர் ஒரு டியுனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.

    ஆண்: பொன்

    பெண்: மஞ்சம்

    ஆண்: தான்

    பெண்: அருகில்

    ஆண்: நீ

    பெண்: வருவாயோ?

    - இப்படி பாடிக்காட்டினோம். அதாவது ஆண் பாடுவதை தனியாகவும், பெண் பாடுவதை தனியாகவும் பிரித்துப் படித்தால் தனித்தனி அர்த்தம் வரும்.

    அதாவது `பொன் தான் நீ' என்கிறான் ஆண்.

    `மஞ்சம் அருகில் வருவாயோ' என்கிறாள், பெண்.

    சேர்ந்து பாடும்போது `பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ' என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.

    `சரி' என்று புரிந்ததாக தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பிறகு கையில் பேடை எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென எழுதினார்.

    இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்ததில் எல்லோருக்குமே பிடித்துப்போயிற்று.

    இந்தப் பாடலை ரெக்கார்டு செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது. ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாடவேண்டும் அல்லவா.

    ஏவி.எம். சம்பத் சாரிடம் "ஒரு குரல் பாடுவதை மட்டும் முதலில் ரெக்கார்டு செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம். இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி "பிளே'' செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம். பிறகு இன்னொரு ரெக்கார்டரில் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.

    டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இருவரில், மோகன் சாருக்கு கம்போசிங் சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை. இந்தப் பாடலும் பிடிக்கவில்லை. பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் "உம்''மென்றே காணப்பட்டார்.

    `எப்படி வருமோ?' என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.

    தேவராஜோ உற்சாகமாக இருந்தார். "இந்த மாதிரி ஐடியா வருவதே கஷ்டம். புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்? இப்படிச் செய்கிற நேரத்தில் அதைப்பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் `கலைஞனாக' இருப்பதற்கு அர்த்தம் என்ன?'' என்று பேசினார்.

    இந்தப் பாடலின் இடையிடையே, பஸ்சில் கண்டக்டர் "தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட்... இறங்கு!'', "இந்தாம்மா கருவாட்டுக்கூடை! முன்னாடி போ!'' என்று பேசுகிற மாதிரி வரும். இதற்கு அண்ணன் பாஸ்கரை பேச வைத்தேன்.

    அந்தப் பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பை பெற்றது.''

    - இப்படிச் சொன்ன இளையராஜா, மூகாம்பிகை அம்மன் பேரில் கொண்ட பக்தியால் 4 பாடல்களை அதுவும் கன்னடப் பாடல்களை பாடி அன்றைய இசை உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அதுபற்றி கூறியதாவது:-

    "என்னதான் பாடல்கள் இசையமைப்பு, பாட்டுப் பயிற்சி என்று பிசியாக இருந்தாலும் அம்மா மூகாம்பிகை மீது எனக்கு ஒரு கவனம் எப்போதுமே இருந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மூகாம்பிகை போவதும், யார் வந்தாலும் என் செலவில் அழைத்துப்போவதும் தொடர்ந்தது.

    இந்த நேரத்தில் அம்மாவைப் பற்றி கன்னடத்தில் பக்திப்பாடல் பாடி வெளியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே தாமதமின்றி கன்னடப் பாடலாசிரியர் உதயசங்கரை சந்தித்தேன். "மூகாம்பிகை அம்மன் பற்றி 4 பக்திப்பாடல்கள் எழுதித்தர வேண்டும்'' என்று கேட்டேன்.

    அவரோ பிசியாக இருப்பதாகவும், இன்னொரு நாள் எழுதித் தருவதாகவும் சொல்லிவிட்டார்.

    நான் அவரை விட பிசியாக இருந்தும், குறிப்பிட்ட அந்த நாளில் அந்த 4 பாடல்களையும் ரெக்கார்டு செய்தே தீருவது என்பதில் உறுதியுடன் இருந்தேன்.

    என் பிடிவாதம் தெரிந்து கொண்ட உதயசங்கர், "எப்படியாவது பாடல்களை எழுதித்தந்து விடுகிறேன். ஆனால் நான் ரெக்கார்டிங்கிற்கு வரமுடியாது. என்னுடைய உதவியாளரை அனுப்புகிறேன். ஆனால் உன்னால் கன்னடத்தில் பிழையின்றி பாடமுடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கன்னடம் சரியில்லை என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

    "பரவாயில்லை; முயற்சி செய்து பார்க்கிறேன்'' என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட நாளில் ரெக்கார்டிங் தொடங்கி விட்டேன். டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் புதல்வர் கே.எஸ்.ரமணனின் "ஜெயஸ்ரீ ரெக்கார்டிங் தியேட்டரில்'', குறைந்த வாத்தியங்களை வைத்துக்கொண்டு பாடினேன்.

    அப்போது என் மனமெல்லாம் அம்பாளின் திருவடியிலேயே ஒன்றியிருந்தது. பாடும்போது உடலெங்கும் ஒரு அதிர்வு இருந்து கொண்டிருந்தது.

    4 பாடல்களையும் ரெக்கார்டு செய்து முடிக்கும் நேரம் உதயசங்கர் வந்தார். பாடலின் கன்னட உச்சரிப்பில் தவறு ஏதும் இருக்கிறதா என்பதை கேட்பதற்காக வந்தார்.

    பாடலைக் கேட்டவர்: "கன்னடப் பாடகர்களே பாடினாலும் இத்தனை தெளிவான கன்னடமாக இருக்காது. அவ்வளவு நன்றாக பாடிவிட்டீர்கள்'' என்று பாராட்டினார்.

    அந்த டேப்பை ஜி.கே.வி.யிடம் போட்டுக்காட்ட அவர் வீட்டுக்குப்போனேன். என்னைப் பார்த்ததும், "வாடா ராஜா!'' என்றார். அவருக்கு பாடல்களை போட்டுக் காட்டினேன். "இது நீ பாடலைடா? அம்பாளே வந்து பாடியிருக்கா'' என்று பாராட்டினார்.

    அண்ணியும் (ஜி.கே.வி.யின் மனைவி) உடனிருந்து பாடலை கேட்டார். "அண்ணி! எப்படி இருக்கிறது?'' என்று கேட்டேன்.

    "ஐயோ அதைக் கேட்காதப்பா? எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது'' என்றார்கள்.
    Next Story
    ×