மலையாள பட உலகில் நடிகர், நடிகைகள் மானேஜர்கள் வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அங்கு மானேஜர்கள் நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் 15 சதவீதத்தை சம்பளமாக பெற்று வந்தனர். அந்த பணத்தை தயாரிப்பாளர்களிடம் இருந்தே நடிகர்கள் வாங்கி கொடுத்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் எரிச்சலடைந்தனர்.
மானேஜர்களுக்கு கமிஷன் கொடுக்காதவர்களின் படங்களுக்கு நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. படப்பிடிப்புக்கு போகாமல் வேண்டும் என்றே தாமதம் செய்தனர்.
சமீபத்தில் பத்மபிரியாவும் இதுபோல் தொந்தரவு கொடுத்தார். ‘நம்பர் 66 மதுரை பஸ்’ என்ற மலையாள படத்தில் பத்மபிரியா நடிக்கிறார். நிஷாத் இப்படத்தை இயக்குகிறார். படத்தை முடித்து கொடுப்பதற்கு பத்மபிரியா தனது மானேஜருக்கு கொடுக்க கூடுதல் பணம் தரவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாக இயக்குனர் புகார் கூறினார். தயாரிப்பாளர் சங்கத்திலும் பத்மபிரியா மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அனைத்து திரைப்பட சங்கங்களுடனும் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது. இறுதியாக நடிகர் நடிகைகள் மானேஜர்கள் வைத்துக்கொள்ள தடை விதிப்பது என்றும், இதனை அனைத்து சங்கத்தினரும் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
சம்பள விஷயங்கள் குறித்து நடிகர் - நடிகைகளிடம் நேரில்தான் பேசவேண்டும் என்றும் தீர்மானித்து உள்ளனர்.